பதிவு செய்த நாள்
07
மே
2016
11:05
திருப்பூர், : திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலையில், பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பானது. பக்தர்கள் கனவில் தோன்றும் சிவன்மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை குறிப்பால் உணர்த்தி, பெட்டியில் வைக்க உத்தரவிடுவதாக, ஐதீகம் உள்ளது.சுவாமி உத்தரவு குறித்து பக்தர்கள் கூறினால், கோவில் முன்மண்டபத்தில் உள்ள, ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பேழையில் அப்பொருள் வைக்கப்படும்.நேற்று, திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பக்தர் பூபதி, துளசி செடி வைக்க ஆண்டவன் உத்தரவு கொடுத்ததாக, கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சிவாச்சார்யார்கள், சுவாமியிடம் பூ கேட்டு அனுமதி பெற்றனர். இதையடுத்து, அப்பெட்டியில், மண் கலயத்தில் துளசி செடி வைத்து பூஜிக்கப்படுகிறது.சிவாச்சார்யார்கள் கூறுகையில், சுபிட்ஷம், மங்கலம் ஆகியவற்றுக்கு துளசி பிரதானம்; பெருமாளுக்கு உகந்தது; முருகன் கோவிலில் வைக்கப்படுவதும், தமிழ் வருடம் பிறந்து, முதல் அமாவாசை நாளில், துளசி இடம் பெறுவது மேலும் சிறப்பானதுஎன்றனர்.