காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவில் ரதம், பல்லக்கு வீதி உலா நேற்று நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் (பெரிய பள்ளிவாசல்) 193ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று துவங்கியது. பகல் 3.45 மணிக்கு ரதம்,பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம், பல்லக்குகள் பள்ளிவாசல் வழியாக லெமர்வீதி, பாரதியார் சாலை, திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 26ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா, இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல், அதிகாலை 3 மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல்,29ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது. விழாவின் பாதுகாப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.