பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
12:06
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், 1,000 பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த, 1ம் தேதி, தீமிதி விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தினசரி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் வீதியுலா வந்தது. மேலும், மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வந்தன. நேற்று, காலை, 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 1,000 பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். தொடர்ந்து உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.