பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
10:06
திருப்பதி: திருமலையில், ஏழுமலையானை தரிசிக்க வரும், பக்தர்கள் அனைவரும், லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வர். இதற்காக, தினசரி, திருமலையில், இரண்டு முதல், மூன்று லட்சம் லட்டுகள் வரை, தயார் செய்யப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும் சமயத்தில், இந்த எண்ணிக்கை, மூன்று முதல், நான்கு லட்சமாக அதிகரிக்கும். கோவிலுக்குள், பூந்தி தயாரித்து, லட்டு பிடிக்க, போதுமான இடவசதியில்லாத காரணத்தால், தேவஸ்தானம், ஏழுமலையான் கோவில் வெளியே, பூந்தி தயாரிக்க, மடப்பள்ளி ஒன்றை ஏற்படுத்தியது. இங்கு, பூந்தி தயாரிக்க வசதியாக, வரிசையாக, 40 காஸ் அடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பூந்தி தயாரிக்கும் போது, கசியும் நெய், ஏற்படும் புகை, அங்கேயே பிசுக்காக படிகிறது. இவ்வாறு படியும் பிசுக்குகள் மேல், நெருப்பு படும்போது, அவை தீ பிடிக்கின்றன.
பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயத்தில், லட்டு தயாரிப்பில், இரவு பகலாக, ஊழியர்கள் ஈடுபடுவர். கடந்த வாரம், ஊழியர்கள் பணி மாறும் சமயத்தில், தீ விபத்து நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தின்போது சேதமடைந்த மேற்கூரை, காஸ் அடுப்பு, மின் கம்பிகள் உள்ளிட்டவை, முழு அளவில் சீரமைக்கப்பட்டு, லட்டு தயாரிக்கும் பணிகள், முழு அளவில் துவங்கியுள்ளன.எனவே, இனி இதுபோன்று நிகழாமல் தடுக்க, கோவிலுக்கு வெளியில், அதிநவீன வசதிகளுடன் கூடிய பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.