பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
10:06
குன்னுார்: குன்னுாரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும், சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோ வில், நேற்று திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் அருகே, ஆழ்வார்பேட்டையில், படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான, மகாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டுக்கான, விழா நேற்று நடந்தது. காலை,7:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, பகல், 1:30 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்; பின், நடை அடைக்கப்பட்டது. படுக இனமக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். கோடமலை கிராம நிர்வாகிகள் கூறுகையில்,முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை, பச்சை மூங்கிலில் சேகரித்து, அதைக்கொண்டு, ஆண்டுதோறும் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் மட்டும், கோவிலில் விளக்கெரிய பயன்படுத்தப்படும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே, கோவில் நடை திறந்திருக்கும் என்பது ஐதீகம் என்றனர். இந்த விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மகாலிங்கேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.