பதிவு செய்த நாள்
02
ஜூலை
2016
11:07
கோவை: உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலின், ஐந்து நிலை ராஜகோபுரத் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்துக்கு தயாராகி வருகிறது. கோவை நகரின் தெற்குப்பகுதியான, உக்கடம் ராமர்கோவில் காய்கறி மார்க்கெட் அருகே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, லட்சுமிநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதன் பொலிவுத்தன்மை மாறாமல், கோவிலின் முகப்பில் ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009 ஏப்ரல் மாதம் துவங்கியது. 2013 ஏப்ரலில் பணிகள் நிறைவடைந்தன. தரைதளத்திலிருந்து, 15 அடி ஆழத்துக்கு, கான்கிரீட்டால் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. தரைதளத்திலிருந்து, 12 அடி துாரத்துக்கு கல்காரம் அமைக்கப்பட்டது. அதன்பின், 46 அடிக்கு, செங்கற்களை கொண்டும், மண், சிமென்ட் கலவை கொண்டு, சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கோபுரம் அமைக்கப்பட்டது. மேற்பகுதியில் ஐந்து விமானக்கலசங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம், ஐந்து நிலைகளில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, 37 லட்சம் ரூபாய் உபயதாரர்கள் மூலம் செலவிடப்பட்டுள்ளது. இவற்றோடு, மடப்பள்ளி, தீபமண்டபம், கோவில் அலுவலகம் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவிலின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இது தவிர, விநாயகர் சன்னிதி, அன்னதானக்கூடம் ஆகியவை அமைப்பதற்கான, திட்ட மதிப்பீடு சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். கோவில் மகாமண்டப கட்டட கட்டுமானப்பணிகள் இனியும் துவங்கப்படவில்லை. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் வேகமாக துவங்கும். அனைத்து கட்டட கட்டுமானப் பணிகளும், மூன்று மாதங்களில் நிறைவடையும். அதன் பின், கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை நகரிலுள்ள முக்கிய கோவில்களில், லட்சுமி நரசிம்மர் கோவிலும் ஒன்று. பணிகள் நிறைவடையும் தருவாயில் நாட்கள் குறிக்கப்பட்டு, அதிகாரிகள், அமைச்சர்கள், ஆதீனங்கள் புடைசூழ வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றனர்.