பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
10:07
சிதம்பரம்: ஆனி திருமஞ்சன உற்சவத்தில், நடராஜர் ஆனந்த நடனமாடியதை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் உற்சவம், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. நேற்று பகல், 12:00 மணிக்கு, சித்சபையில் பொது தீட்சிதர்களின் ரகசிய பூஜைகள் நடந்தன. 1:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 3:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளி, தீர்த்தவாரியும் நடந்தது. மாலை, 3:45 மணிக்கு, ராஜ சபையில் இருந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு, தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு மகா தரிசன காட்சியளித்தபடி, சித்சபை பிரவேசம் செய்தார். கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ’பொன்னம்பலத்தானே... ஆடல் வல்லானே..., தில்லைக் கூத்தனே...’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.