பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
ஊத்துக்கோட்டை: ஸ்ரீபாளையத்தம்மனுக்கு, 108 பெண்கள், பால் குடம் ஏந்திச் சென்று அபிஷேகம் செய்தனர். பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ளது ஸ்ரீபாளையத்தம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம், முதல் வெள்ளிக்கிழமை பால்குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்தாண்டு நேற்று காலை, 9:00 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து, 108 பெண்கள், பால்குடம் ஏந்திக் கொண்டு பாளையத்தம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு சீர்வரிசையும் கொண்டு வரப்பட்டது. கோவிலை அடைந்த பின் பக்தர்கள் கொண்டு வந்த பால் அபிஷேகம் செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவின் இறுதி நாளான நாளை, ஞாயிற்றுக் கிழமை காலை, 6:30 மணிக்கு, தீமிதி திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், காலை, 7:30 மணிக்கு, கரக ஊர்வலம் நடைபெறும். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், மதியம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை, 6:30 மணிக்கு தீமிதித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.