திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ல் தேரோட்டம் நடைபெறும். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரமான பூரத்தை முன்னிட்டு, ஆடிப்பூர உற்சவம் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். பூர்வாங்க பூஜைகள் நேற்று முன் தினம் மாலை துவங்கியது. தொடர்ந்து சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்று காலை 7.25 மணிக்கு பெருமாளும் ஆண்டாளும் கல்யாண மண்டபம் எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாளும்,பெருமாளும் வீதி வலம் வந்தனர். தினமும் காலை,இரவில் ஆண்டாள்,பெருமாள் புறப்பாடு நடைபெறும். ஆக.2 காலை அலங்கார திருமஞ்சனம், இரவில் சூர்ணாபிஷேகம் நடைபெறும்.ஆக.5ல் ஆடித்தேரோட்டம்,11ம் திருநாளாக தீர்த்தவாரியும் நடைபெறும்.