பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
சேலம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை விழாவையொட்டி, சேலம், நாமக்கல்லில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் நாமக்கல், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ஆகியவை, வரும், ஆக., 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்டத்தில் இருந்து, ஆக., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து, மேட்டூர், கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ஒகேனக்கல்லுக்கும், நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ப.வேலூர் வழியாக கொடுமுடி, பவானிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செங்கோட்டில் இருந்து, கொடுமுடி, பவானிக்கும், சங்ககிரியில் இருந்து பவானி, ராசிபுரத்தில் இருந்து, காரவள்ளி மற்றும் கொல்லிமலை, காரவள்ளியில் இருந்து, அரப்பளீஸ்வரர் கோவில், இடைப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டியில் இருந்து கல்வடங்கம், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் உள்ளிட்ட வழித்தடங்களில், பயண நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பயணிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.