பதிவு செய்த நாள்
25
ஆக
2016
12:08
கடம்பத்துார்: கடம்பத்துார், ஏகாத்தம்மன் கோவிலில், வரும் 28ம் தேதி, ஜாத்திரை திருவிழா துவங்கி ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட, கசவநல்லாத்துாரில் உள்ளது ஏகாத்தம்மன் கோவில். இந்த கோவிலில், ஜாத்திரை திருவிழா, வரும் 28ம் தேதி துவங்கி, ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான, 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு, ஊர் கூடி பொங்கல் வைத்தலும், காலை, 10:00 மணிக்கு, அம்மனை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு, அம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெறும். தொடர்ந்து, 29ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, கசவநல்லாத்துார் கிராமப்பகுதிகள் முழுவதும் கூழ்வார்த்தல் மற்றும் படையலும் நடைபெறும். பின், செப்., 2ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெறும். அதன்பின், செப்., 3ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, அம்மன் உடை களைதல் நிகழ்ச்சியுடன் ஜாத்திரை திருவிழா நிறைவு பெறும்.