பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
சென்னை: பிள்ளையார்பட்டி விநாயகரை விட, ஆலகிராம விநாயகர் மூத்தவர் என, தொல்லியல் ஆர்வலர் விழுப்புரம் வீரராகவன் தெரிவித்தார். அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரியில் சென்னை தின விழா கொண்டாடப்பட்டது. அதில், தொல்லியல் கண்காட்சி அரங்கை அமைத்திருந்த, விழுப்புரம் வீரராகவன் கூறியதாவது: பல ஆண்டுகளாக, விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் பொருட்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்து வருகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில், ஆலகிராமம் கல்வெட்டை கண்டுபிடித்தேன். அது, வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று, அவனது வாதாபியை எரித்த நரசிம்மவர்மன், அங்கிருந்த கற்பக விநாயகரை கொண்டு வந்து, பிள்ளையார் பட்டி குடைவரை கோவிலில் நிறுவினான். அது, கி.பி., 6ம் நுாற்றாண்டில் நிகழ்ந்தது. அதுதான், தென்னிந்தியாவின் முதல் விநாயகர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.
ஆனால், திண்டிவனத்திற்கு அருகில் ஆலகிராமத்தில் உள்ள விநாயகர், கி.பி., 4 - 5ம் நுாற்றாண்டை சேர்ந்தவர் என்பதை, ஆலகிராமம் கல்வெட்டில் உள்ள, வட்டெழுத்து உணர்த்துகின்றன. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் என்ற கிராமத்தில், முதலாம் நரசிம்மன் காலத்திய, எழுத்தில் பொறிக்கப்பட்ட சிலம்ப வீரனின் நடுகல்லை கண்டுபிடித்தேன். அது தான், தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே சிலம்ப வீரனுக்கான நடுகல்லாகும். கடந்த, 1992ல், முகையூர் கோழி, மேலச்சேரிக்கு ஆடிய கோழிக்கான நடுகல்லை கண்டுபிடித்தேன். எழுத்துப்பொறிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட அய்யனார், கொற்றவை, முருகன், விநாயகர், மூத்ததேவி சிற்பங்களை, பொதுமக்களின் ஆதரவோடு கண்டுபிடித்துள்ளேன். விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, வரலாறு, தொல் பொருட்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.