பதிவு செய்த நாள்
09
செப்
2016
11:09
விக்கிரவாண்டி: தொரவி கைலாசநாதர் கோவில் கருவறை வாசற்படி அமைப்பதற்கு சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் அமைந்துள்ள, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலுக்கு புதியதாக கருவறை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை 7:42 மணிக்கு, அனுஷ நட்சத்திரம், கன்னி லக்கினத்தில் கருவறையில் வாசற்படி அமைக்க சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வாசற்படிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். முன்னதாக, சிவனடியார்கள் பாலசுப்ரமணி தலைமையில் மாலதி, சுலோசனா, சிவராஜா ஆகியோர் திருவாசகம் முற்றோதினர். தொரவி அ.தி.மு.க., நிர்வாகி சுப்பிரமணி, புதுச்சேரி மத்திய மாவட்ட காங்., முன்னாள் தலைவர் கண்ணன், கந்தன் பேரவை நிறுவனர் கந்தன் நாராயணசாமி, வழக்கறிஞர் சம்பத், ரவி, ஸ்தபதி நெமிலி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.