திருப்புவனம் : திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற காளி கோயிலாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் தொடங்கின. நேற்று மடப்புரம் காளி கோயிலில் இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ரோசாலின் சுமதா, மடப்புரம் நாட்டாமை சஞ்சீவி, அறங்காவலர் குழு தலைவர் ஜெயசங்கர் மற்றும் உறுப்பினர்கள் ,உபயதாரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பணிகளை விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தப்பட்டது. முடிவில் வரும் ஜனவரிக்குள் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்துவது என்றும் அதற்கான தேதியை இறுதி செய்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.