பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
ராமநாதபுரம் : முகவை கண்ண முருகனார் (1890-1973) எனும் வர கவிராயரை பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் 1910--1924 கால கட்டத்தில் ஒரு தேச பக்க கவிஞராக தமிழகமெங்கும் பிரபலமானவர் கவிராயர். சம காலத்தவரான மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு இணையாக பரவலாக பேசப்பட்டவர் தேசிய கவி முருகனார். தமிழ் இலக்கியத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் சங்க தமிழ் நடையில் கவிதை மழை பொழிந்தவர். பகவான் ரமணரின் திருவடிகளை நாடி ஆன்ம லாபம் பெற்ற தலையாய அடியார்களில் முருகனாரும் ஒருவர். ராமநாதபுரத்தில் 1890ல் கிருஷ்ணய்யர்-சுப்பு லட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கி ராமநாதபுரம் சமஸ்தானத்திருக்கு புலவராக இருந்து ராவ் சாகிப் ராகவ ஐயங்கார், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், ராவ்பகதுார் செங்கல்வராய பிள்ளை உள்ளிட்ட தமிழ் அறிஞர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றார். மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்று தேசிய பாடல்கள் எழுதி சிறந்த காந்தியவாதியாகவும் திகழ்ந்தார். தமிழ் அகராதி தொகுப்பு குழு உ<றுப்பினராகவும், சென்னையில் தமிழாசிரியராகவும் பணியாற்றிய இவர், பகவானது அருணாச்சலேஸ்வரர் ஸ்துதி பஞ்சகம் நான் யார் உபதேசங்களை படித்து 1923ல் திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை சரணடைந்தார்.
மனையை துறந்த இவருக்கு தமிழ் கவிதை திறமையை துறக்க இயலவில்லை. பகவானை போற்றி ரமண சந்நிதி முறை, குருவாசக கோவை, சரண பல்லாண்டு ஞான போதம், அனுபூதி போன்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் இயற்றி தமிழ் தொண்டாற்றினார். பகவான் ரமணரது முக்கிய உபதேச பாடல்களாகிய உள்ளது நாற்பது, உபதேச உந்தியார் , ஆன்ம வித்தை போன்றவற்றை பகவான் இயற்றுவதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர் முருகனார். திருவண்ணாமலையை நிரந்தர வாச தலமாக கொண்டு வாழ்ந்து 28.8.1973ல் (ஆவணி அமாவாசை) பகவானது திருவடியை அடைந்தார். இவரது சமாதி தலம் திருவண்ணாமலை ஸ்ரீரமணாசிரமத்தின் பராமரிப்பில் ஆஸ்ரம வளாகத்தினுள் அமைந்துள்ளது. முருகனார் தனது உடல், பொருள், ஆவி மூன்றையும் தனது குருவான ரமண பகவானுக்கு அர்ப்பணம் செய்தமைக்கு அடையாளமாக அவர் பிறந்து வளர்ந்த இந்த இல்லம் முருகனார் மந்திரம் என்ற நினைவாலயமாக ஸ்ரீரமணாஸ்ரம பராமரிப்பில் உள்ளது.
ராமநாதபுரம் ரமண கேந்திரம் முருகனார் மந்திரம் 1993 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை 4:00 மணிக்கு விளக்கிட்டு நமஸ்காரம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 5:30 மணிக்கு முருகனார் வாழ்க்கை வரலாறு பாராயணம் செய்யப்படுகிறது. ஆஸ்ரம உத்தரவுப்படி தினமும் காலை 11:30 மணிக்கு நாராயண சேவை(மதிய உணவு) வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரம் மற்றும் ஜெயந்தி அன்று ஆராதனை நடக்கிறது. பகவான் அருளிய அட்சர மணமாலை தினமும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.