பதிவு செய்த நாள்
26
செப்
2016
11:09
திருச்சி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருச்சி, கொள்ளிடம் அருகே, களி மண்ணால் ஆன கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணி, மும்முரமாக நடக்கிறது.
நவராத்திரி விழா, அக்., 2ல்துவங்குகிறது. இதையொட்டி, கோவில்கள், வீடுகளில் கொலு வைப்பர். இதில், விதவிதமான பொம்மைகள் இடம்பெறும். இதற்கு, மண் பொம்மைகள் தயார் செய்யும் பணி, திருச்சி கொள்ளிடம் அருகே, கன்னிமார்தோப்பில், மும்முரமாக நடக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள ஜெய்சங்கர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு, சிலைகள் தயாரித்து முடித்தவுடன், நவராத்திரி கொலுவுக்கான பொம்மைகள் தயாரிக்க துவங்கி விடுவோம். இந்த பொம்மைகள் அனைத்தும், களி மண்ணால் தயாரிக்கப்படுகின்றன. தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், திருமண கோலம் போன்ற பொம்மைகள் செட்டும், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகளும், விற்பனைக்கு தயாராக உள்ளன.
இது தவிர, கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப, 30 ரூபாய் முதல், விற்பனை செய்யப்படுகிறது.திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும், பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.