நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும், புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒரு நாள் என்று சொன்னால் அதில் பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி பராசக்தியின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் இல்லை. பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவில் தேவி அமைதியாக உறங்கச்செய்து தாலாட்டுகிறாள். அனைத்தும் உறங்கும் காலத்தில் தான் உறங்காமல் இருந்து அவற்றை காப்பாற்றுகின்றாள். வேதத்தில், சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன் என கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.