பதிவு செய்த நாள்
03
அக்
2016
12:10
கோபி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில், சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள, செந்தாம்பாளையத்தில், தேசப்பிதா காந்திக்கு, கோவில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த, 1997 பிப்., 6ல் கும்பாபிஷேகம் நடந்தது. கையில் தடியுடன், கண்ணாடி அணிந்த, 5 அடி உயர காந்தி சிலை, அதன் எதிரே அன்னை கஸ்துாரிபாய் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பிற நாட்களில் மூன்று வேளையும், பூஜைகள் நடக்கின்றன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 8:30 மணிக்கு, காந்தி மற்றும் அன்னை கஸ்துாரி பாய் சிலைக்கு, புனித நீர் ஊற்றி மந்திரம் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை தொடர்ந்து, காந்தி சிலைக்கு கதர் வேட்டி, கண்ணாடி மாட்டி, கையில் தேசியக் கொடி செருகி, அலங்காரம் செய்யப்பட்டது.