நவராத்திரி என்றால் ஏதோ பொம்மைகளை வைக்கிறோம். நைவேத்யம் செய்கிறோம் என்பது கிடையாது. நவராத்திரி கொண்டாடுவதற்கு ஒரு தத்துவம் இருக்கிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குகிறோமே ஏன்? இதனை சற்றே சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் ரகசியம் புலப்படும். மனிதர்களாகப் பிறந்து விட்டால் கூடவே பயமும் பிறக்கிறது. அச்சம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நமது தயக்கம் நம்மை முன்னேற விடாமல் செய்துவிடும். தன்னம்பிக்கையும் தைரியமும் முதல் அவசியம். அதனால்தான் அதைத் தரும் துர்க்கையை நாம் முதல் மூன்று நாட்களுக்கு வணங்குகிறோம்.
தைரியத்தையும், தன்னம்பிக்கையும் பெற்றுவிட்டால் நமக்கு வெற்றிதான். வெற்றி வந்தால், கூட செல்வமும் வந்துவிடும். அந்த செல்வத்தைப் பெறுவதற்குத்தான் அடுத்த மூன்று நாட்களில் நாம் லட்சுமியை வணங்குகிறோம். மூன்றாவதாக உழைப்பால் உயர்ந்து, செல்வச் செழிப்போடு இருந்தால் மட்டும் போதுமா? இவற்றைப் பாதுகாக்க ஞானம் வேண்டாமா... இந்த ஞானத்தைப் பெறத்தான் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை வணங்குகிறோம். இந்த மூன்று தெய்வங்களையும் போற்றி வணங்கிய பிறகு விஜயதசமி கொண்டாடுகிறோம். விஜய என்றால் வெற்றி. வெற்றி என்றால் என்ன? அச்சம், மடமை, கர்வம் ஆகிய தீய எண்ணங்களைக் களைந்து நாம் நம்மை வெற்றி கொள்ளுதல். அதைத்தான் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். முப்பெரும் சக்திகளில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வது கடினம். இவர்கள் மூவரும் ஒருவருடன் ஒருவர் பிணைந்துள்ளார்கள். இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து நாம் இம் மூன்று தேவியர்களை வழிபட்டு வந்தோம் என்றால் வாழ்வில் எங்கும் வெற்றிதான் விஜயம் தான்.