கோபேஷ்வர்: குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 16ம் தேதி மூடப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில், கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குளிர்காலத்தின்போது பனிப்பொழிவு அதிகம் இருக்கும். பனி மூடுவதால் கோயில் நடை சாத்தப்பட்டு, குளிர்காலம் முடிந்தபின்னர் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டு குளிர்காலத்தையொட்டி நவம்பர் மாதம் 16ம் தேதி கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16ம் தேதி பிற்பகல் 3.45 மணி சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு கோயில் நடை சாத்தப்படும் என கோவில் தலைமை அதிகாரி புவன் சந்திர உனையாள் தெரிவித்தார்.