தீபாவளி மகாபண்டிகையின் முதல் நாளும் மறுநாளும்கூட முக்கியமான நாட்களே. ஐப்பசி மாத அமாவாசை தீப உற்சவத்திற்கு உகந்தநாள். கிருஷ்ண சதுர்தசியே நரக சதுர்தசி. மகாளய பட்சத்தில் வந்த பித்ரு தேவதைகளுக்கு வெளிச்சத்தைக் (தீப்பந்தம்) காட்டி அவர்கள் திரும்பவும் மற்ற உலகங்களுக்குச் செல்வதற்கு வழிகாட்டுவது என்பது நரக சதுர்தசியன்று மாலை செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்று. யமலோகம் போன்ற உலகங்களுக்கு (பித்ரு லோகங்களுக்கு) மார்க்கம் காட்டுவதனால் இந்த சதுர்தசிக்கு நரக என்ற அடைமொழி உள்ளது. இறந்தவர்களுக்கு நரக வேதனை இருக்கக் கூடாது என்ற பாவனை இதில் அடங்கியுள்ளது. இந்த நம்பிக்கையின் பின்னால் மூதாதையர்களின் மேல் இருக்கும் அன்பு, பக்தி போன்ற பாவனைகள் காணப்படுகின்றன.