பதிவு செய்த நாள்
03
நவ
2016
03:11
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அதே போல் எதிரிகள் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை என்றும் சொல்லலாம். ஆனால், இந்தக் கலிகாலத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. எதிரிகளின் தொல்லை என்பது நேருக்கு நேர் நின்று நமக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமே இல்லை; நாம் கஷ்டப்பட வேண்டும், நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்றெல்லாம் நமக்கு வேண்டாதவர்கள் நினைப்பதும்கூட ஒருவகையில் நம்மை கஷ்டப்படுத்தவே செய்யும் என்பதால், அதுவும்கூட ஒருவகையில் மறைமுகமான எதிரிகளின் தொல்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படி எதிரிகளால் ஏற்படக்கூடிய சகலவிதமான தொல்லைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுபவள் மஹா பிரத்யங்கிராதேவி.
வைகுண்டத்தில் துவாரபாலகர்களாக இருந்த ஜய, விஜயர்கள் சனகாதி முனிவர்களின் சாபத்தால் பூமியில் பிறக்கும்படியாக சபிக்கப்பட்டனர். ஜய, விஜயர்கள் பகவானிடம் முறையிட்டனர். ஆனால், பகவான், முனிவர்களின் சாபத்தை மாற்ற யாராலும் முடியாது. நீங்கள் பூமியில் நல்லவர்களாக நூறு பிறவிகள் எடுத்த பிறகு என்னை அடையலாம். அல்லது என்னை வெறுப்பவர்களாக மூன்று பிறவிகள் எடுத்து என்னால் சம்ஹாரம் செய்யப்பட்டு என்னை அடையலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி உங்களுக்கு நான் வரம் தருகிறேன் என்றார். ஜய, விஜயர்கள் நூறு பிறவிகள் தங்களால் பகவானைப் பிரிந்து இருக்கமுடியாது என்பதால், கொடியவர்களாக மூன்று பிறவிகள் மட்டுமே எடுத்து, பகவானால் சம்ஹாரம் செய்யப்பட்டு விரைவில் பகவானிடம் வந்துவிடவேண்டும் என்று வரம் பெற்றனர். அப்படி ஜய, விஜயர்கள் முதலில் எடுத்த பிறவிதான் இரண்யாக்ஷன்; இரண்யகசிபு.
இரண்யாக்ஷனை பகவான் வராக அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்தார். இரண்யகசிபுவை பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, சம்ஹாரம் செய்து அவனுடைய ரத்தத்தைப் பருகினார். அசுரனின் ரத்தத்தைப் பருகிய காரணத்தால், பகவான் உக்கிரம் தாங்கமாட்டாமல் அஞ்சிய தேவர்கள், சிவபெருமானிடம் சென்று பிரார்த்தித்தனர். சிவபெருமான் தம்முடைய அம்சமாக சரபரைத் தோற்றுவித்தார். சரபர் நரசிம்மரின் உக்கிரகத்தைத் தணிவிக்க அவருடன் போரிட்டும் அவருடைய உக்கிரத்தைத் தணிவிக்க முடியவில்லை. அப்போது சரபரின் இறக்கைகளில் இருந்து சூலினி, பிரத்யங்கிரா தேவியர் தோன்றி நரசிம்மரின் உக்கிரகத்தை அடக்கியதாக புராண வரலாறு.
பிரத்யங்கிரா தேவி வாமா என்னும் பூமி சக்தியாகவும்; ஜ்யேஷ்டா என்னும் ஜல சக்தியாகவும்; ரௌத்ரி என்னும் அக்னி சக்தியாகவும் காளி என்னும் காற்று அல்லது உயிர் சக்தியாகவும்; கலவிகரணி என்னும் ஆகாயம் அல்லது பிரபஞ்ச சக்தியாகவும்; பலவிகரணி என்னும் அமிர்த சக்தி (சந்திரன்)யாகவும்; பலபிரமதனி என்னும் சூரிய சக்தியாகவும்; சர்வபூத தமனி என்னும் பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும்; மனோன்மணி என்னும் மோட்சம் அருளும் சக்தியாகவும் என்று நவ சக்திகளை தன்னுள் கொண்டவளாகத் திகழ்கிறாள். அவளின் அனுக்கிரஹத்தால் சகல ஆபத்துக்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
இந்த தேவிக்கான மூல மந்திரம்:
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தீ நோரயா:
க்ரூராம் க்ரித்யாம் வதூமிவா தாம் ப்ரம்மணா அபநிர்ன்னுதமா:
ப்ரத்யக் கர்த்தாரம் ருச்சது ஹ்ரீம் ஓம்.
இந்த மந்திரத்தின் ரிஷி: நாரதர்; சந்தஸ்: அனுஷ்டுப்;
தேவதை: மஹா பித்யங்கிரா தேவி.
மாலா மந்திரம்:
ஓம் ஹ்ரீம் நம: க்ருஷ்ண வாஸஸே சத சஹஸ்ர ஹிம்ஸினி
சஹஸ்ரவதனே மஹாபலே அபராஜிதே ப்ரத்யங்கிரே
பரஸைன்ய பரகர்ம வித்வம்சினி பரமந்த்ரோத்சாதினி சர்வபூததமனி
சர்வ தேவான் பந்த பந்த
சர்வவித்யாஸ்சிந்தி சிந்தி க்ஷோபய க்ஷோபய பரயந்த்ரானி ஸ்போடய ஸ்போடய
சர்வஸ்ரீங்கலாம் த்ரோடய த்ரோடய ஜ்வாலாஜிஹ்வே காரலவதனே
ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நம:
இந்த மந்திரங்களை முறைப்படி குருமுகமாக உபதேசம் பெற்று, அங்கநியாச, கரநியாச, பூர்வாங்க பூஜைகளைச் செய்து, சிங்க முகத்துடன் வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்க வாகனத்தில் வீற்றிருப்பவளும், நான்கு திருக்கரங்களில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்களை ஏந்தி இருப்பவளும் எட்டு திசைகளில் இருந்தும் வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பக்தர்களைக் காப்பவளும், சர்வ மங்களங்களையும் அருள்பவளுமான பிரத்யங்கிரா தேவியை தியானிக்கிறேன் என்று தியானித்து மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை ஜபிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட பாடலை பாராயணம் செய்யலாம்.
முன்னம் அடியேன் அறியாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்காளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தன் கடனாவதுதான்
அன்னநடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
தனது சூலை நோய் நீங்குவதற்காக திருவதிகை ஈசனைப் பிரார்த்தித்து அப்பர் பாடிய இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்தால், சத்ருக்கள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் நம்மை அணுகாது.