பதிவு செய்த நாள்
04
நவ
2016
12:11
பழநி : பழநி மலைக்கோயிலில் அக்.,31ல் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழாவில் நாளை முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது, இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4:30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது.
நடைஅடைப்பு : வழக்கமாக மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 1:30 மணிக்கு நடக்கிறது. 2:30 மணிக்கு, சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம்புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கியவுடன், சன்னதி நடை அடைக்கப்படுவதால் இரவு 7:00 மணி தங்கரதப் புறப்பாடு கிடையாது.
சூரன்கள் வதம் : நாளை கந்தசஷ்டியை முன்னிட்டு பெரியநாயகியம்மன்கோயிலில் இருந்து முத்து குமாரசுவாமி வள்ளி தேவசேனா சமேதராய் மயில்வாகனத்தில் மலைஅடிவார மண்டபத்திற்கு வருகிறார். திருஆவினன்குடியில் பரா சக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6:00 மணிக்கு நான்கு கிரிவீதிகளிலும் தாரகாசூரன், பானு கோபன்சூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
இரண்டு திருக்கல்யாணம் : பழநி கந்தசஷ்டி விழாவில் நவ.,6ல் மலைக்கோயிலில், காலை 11:00 மணிக்குமேல் சண்முகர், வள்ளி தேவசேனாவிற்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.