பதிவு செய்த நாள்
10
நவ
2016
12:11
சென்னை: கிரிவல பாதை விரிவாக்கப் பணிகளுக்கு, நிபந்தனைகளுடன் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதை விரிவாக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்படுவதாக, செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழக்கு பதிவு செய்தது.மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களும் வழக்கு தொடர்ந்ததால், கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு, ஜூலை, 4ல், இடைக்கால தடை விதிக்கப்பட்டது.விரிவாக்கப் பாதையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை வனப் பாதுகாவலர் சேகர் இடம் பெற்ற கமிட்டியை தீர்ப்பாயம் அமைத்தது. அந்த கமிட்டி, செப்., 28, 29ல், கிரிவல பாதையை ஆய்வு செய்து, தீர்ப்பாயத்தில் அறிக்கை அளித்தது. அதற்கு, மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அக்., 15ல், மீண்டும் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தது.இந்நிலையில், நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய முதன்மை அமர்வு, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு: கிரிவல பாதை விரிவாக்க பணிகளுக்கு, சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
* ஆய்வறிக்கைப்படி, புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையான, முதலாவது பகுதியில், மலையை ஒட்டிய வலது புறத்தில், பேவர் ப்ளாக் நடைபாதை கற்களை பதிக்கலாம். இடது புறத்தில் உள்ள, ஒரு மரத்தை அகற்றாமல், குடியிருப்பவர்களுக்கு இடமளித்து, தார் சாலை அமைக்க வேண்டும்* கிரிவல பாதையின், மூன்றாவது பகுதியில் இடையூறாக உள்ள, மாணிக்கவாசகர் கோவிலின் சுற்றுச்சுவரை இடித்து, பாதையை விரிவுபடுத்தலாம்* கிரிவல பாதையில், எல்.இ.டி., பல்புகளை பொருத்துவதுடன், கன்றுகள் நடப்பட்டுள்ள இடத்தில், இரண்டு மீட்டருக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். மேலும் சில இடங்களை கண்டறிந்து, நாட்டு மரக்கன்றுகளை நட வேண்டும்* மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்* பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாதபடி, பண்டிகை நாட்களில் மட்டும், சிறு வியாபாரிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்* விரிவாக்கம் செய்யப்படுகிற, ஐந்து பகுதிகளிலும், நீர்நிலைகளுக்கு பாதிப்பில்லாமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும்* மேலும், சில பகுதிகளை, டிச., 12ல், கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும்; அந்த அறிக்கைக்கு பின், இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணை, 2017 ஜன., 6க்கு ஒத்திவைக்கப்பட்டது.