சீவலப்பேரி துர்காம்பிகை கோயிலில் பாலமுரளி கிருஷ்ணாவின் சிலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2016 11:11
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி துர்காம்பிகை கோயில் கோபுரத்தில் கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு அமைக்கப்பட்டுள்ள சிலை, அவரது நினைவை போற்றும் வகையில் உள்ளது. சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றின் இடதுகரையில் துர்காம்பிகை கோயில் உள்ளது. இதை நெல்லையை சேர்ந்த சங்கரய்யர் என்பவர் தலைமையில் செயல்பட்ட டிரஸ்டியினர் நிர்மாணித்தனர். தனியார் கோயில் என்பதால், ஆரம்பத்தில் கட்டுமான பணிக்கு சிரமப்பட்டது.சங்கரய்யர் இதற்காக நிதிதிரட்டும் முயற்சியை மேற்கொண்டார். 1980களில் பாலமுரளி கிருஷ்ணாவை அணுகிய போது, நெல்லை சங்கீத சபாவில் இசைக்கச்சேரி நடத்தி, 2.5 லட்சம் ரூபாய் நிதி பெற்று தந்தார். கோபுர முதல்தளத்தில் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அமர்ந்த நிலையில் சிலை அமைக்கப்பட்டது. 2000ல் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2013ல் பாலமுரளி கிருஷ்ணா இக்கோயிலில் தரிசனம் செய்தார். நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் கோபுரத்தில் பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் சீவலப்பேரி துர்காம்பிகை கோயிலில் உள்ள சிலை, இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் நினைவை என்றென்றும் போற்றும் விதமாக உள்ளது.