பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
சேலம்: சேலம், நான்கு ரோடு, குழந்தை ஏசு பேராலயத்தின் வெள்ளி விழா, நாளை துவங்குகிறது. இதுகுறித்து, சேலம் குழந்தை ஏசு பேராலய பங்குத்தந்தை கிரகோரி ராஜன் கூறியதாவது: சேலம், குழந்தை ஏசு பேராலயம், 1991 நவம்பரில் துவங்கப்பட்டது. பேராலயம், மறைந்த முன்னாள் ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமியின் சிறப்பை எடுத்துக்கூறும் சான்றாக உள்ளது. பிரான்ஸ் நாட்டின் கோத்திக்கட்டட வடிவமைப்புப்படி, 18 ஆயிரம் பரப்பளவில், 5,000 பேர், ஒரே நாளில் கூடி ஜெபிக்கும் வகையில், பேராலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கட்டி, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, நவ., 25, 26, 27 ஆகிய நாட்களில், வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவில், பேராலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில், நவ., 25ல், கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அன்றும், மறுநாள் மாலையும், நன்றித்திருப்பலி மற்றும் கலைநிகழ்ச்சியும், 27 மாலை நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதில், ஐந்து மறைமாவட்ட ஆயர்கள் பங்கேற்று, மந்திரித்து புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து, இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடும் தம்பதியருக்கு பாராட்டும், நினைவு பரிசும் வழங்கப்படும். ஒரு ஏழை குடும்பத்துக்கு, இல்லம் பரிசாக வழங்கப்படுகிறது. ஆலய வரலாறு குறித்த, குறுந்தகடு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். உதவி பங்குத்தந்தை தோமினிக் சாவியோ, கிறிஸ்துராஜ் மற்றும் பங்கு ஆலோசனைக்குழுவினர் உடனிருந்தனர்.