பதிவு செய்த நாள்
26
நவ
2016
11:11
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் கோலாகலமாக துவங்கியது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை ஏகாதசி திருவிழாவையொட்டி, செம்பை சங்கீத உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சங்கீத உற்சவம் நேற்று மாலை, 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் மேல்பத்துார் கலையரங்கில் நடந்தது. தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் துவக்கி வைத்தார். விழாவில், செம்பை நினைவு விருது, இசைக்கலைஞர் டாக்டர் ஓமனக்குட்டிக்கு வழங்கப்பட்டது. இன்று முதல் டிச.,10 வரை நடக்கும் சங்கீத உற்சவத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நேற்று காலை, 10:30 மணிக்கு, பாலக்காடு மாவட்டம் செம்பையில், செம்பை வைத்தியநாத பாகவதர் பயன்படுத்திய தம்புராவுடன், அலங்கரித்த வாகன ஊர்வலம், குருவாயூர் கோவிலுக்கு புறப்பட்டது.செம்பை வித்யா பீட துணை தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்துார் முருகனிடமிருந்து, குருவாயூர் சங்கீத உற்சவ துணை கமிட்டி உறுப்பினர் வைக்கம் வேணுகோபால், தம்புராவை பெற்றுக்கொண்டார். பூழிக்குன்னம் மகா விஷ்ணு கோவில், கலாமண்டலம், குருவாயூர் மம்மியூர் கோவில் ஆகியவற்றில் தம்புரா வந்த வாகனத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்புராவை பெற்றுக்கொண்ட குருவாயூர் கோவில் நிர்வாகிகள், உற்சவ விழா மேடையில் பிரதிஷ்டை செய்தனர்.