பதிவு செய்த நாள்
26
நவ
2016
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீப திருவிழாவை முன்னிட்டு, மாட வீதியில், 24 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 12 அன்று, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவை காண, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். கோவில் வளாகத்தில், நான்கு கோபுரம் உள்ளிட்ட, அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க, 60 கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. இதில், பதிவாகும் காட்சிகளை, கோவில் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மொபைல் போனிலேயே கண்காணிக்கும் வகையில், அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாட வீதியில், 24 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கோவில் தங்க கொடி மர வளாகத்தில், சுழலும் இரண்டு கேமரா, சுவாமி அலங்காரம் செய்யும் திருக்கல்யாண மண்டபத்தில், இரண்டு கேமரா என, நான்கு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இவை அனைத்தையும், கோவிலில் உள்ள கன்ட்ரோல் ரூம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கன்ட்ரோல் ரூம் ஆகியவற்றில் இருந்து கண்காணிக்க முடியும். தீப திருவிழாவில், வீதி உலா வரும் தேரை, பழுது பார்க்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. தேரில் உள்ள மரச் சிற்பங்கள், மிகவும் பழமை வாய்ந்தவை; விலை உயர்ந்தவை. இதை பாதுகாக்கும் வகையில், தேருக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.