பதிவு செய்த நாள்
28
நவ
2016
11:11
சேலம்: சேலம் குழந்தை இயேசு பேராலயத்தின் வெள்ளி விழா நிறைவு நாளில், ஐந்து மறைமாவட்ட ஆயர்கள் பங்கேற்று, கூட்டுத்திருப்பலி நடத்தினர். சேலம், நான்கு ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாட்டம், கடந்த, 25ல், தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியேற்றி துவக்கிவைத்தார். நேற்று முன்தினம், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், நன்றி திருப்பலி நடந்தது. நிறைவு நாளான நேற்று, ஏஞ்சல்ஸ் உடையணிந்த சிறுமிகள், அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து, உதகை ஆயர் அமல்ராஜ், புதுப்பிக்கப்பட்ட திருத்தூயகத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தி, திருவிளக்கு ஏற்றினார். சேலம் ஆயர் சிங்கராயன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. அதில், ஐந்து மறைமாவட்ட ஆயர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, வேலூர் ஆயர் சவுந்திரராஜூ, ஒரு ஏழை குடும்பத்துக்கு, வெள்ளி விழா நினைவாக வீடு வழங்கினார். கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், வெள்ளி விழா கொண்டாடும் தம்பதியருக்கு, நினைவு பரிசு வழங்கினார். திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி, வெள்ளி விழா மலரை வெளியிட்டார். குழந்தை இயேசு பேராலய வரலாற்று குறும்படத்தை, சேலம் முதன்மை குரு ஜான் ஜோசப் வெளியிட்டார். சேலம் குளூனி பள்ளி குழுமம் மற்றும் குழந்தை இயேசு கலைக்குழுமம் சார்பில், கலைநிகழ்ச்சி நடந்தது. இதில், குழந்தை இயேசு பேராலய பங்குத்தந்தை கிரகோரிராஜன், உதவி பங்குத்தந்தை தோமினிக் சாவியோ, கிறிஸ்துராஜ் மற்றும் பங்கு ஆலோசனைக்குழு துணைத்தலைவர் மார்ஷல், செயலாளர் ஹென்றிவில்சன், பொருளாளர் பூரணி மற்றும் சேலம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.