சபரிமலை பிரசாத வினியோகத்துக்கு கூடுதல் கவுன்டர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2016 12:12
சபரிமலை: நெரிசல் இல்லாமல், பக்தர்கள் பிரசாதம் வாங்கி செல்ல வசதியாக மாளிகைப்புறம் கோவில் அருகே, மேலும் மூன்று கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சபரிமலையில், முக்கிய வழிபாடு பிரசாதம் அப்பம், அரவணை. இது வினியோகம் செய்வதற்காக கோவில் முன்புறம், ஆழிக்குண்டம் அருகே, 12 கவுன்டர்கள் உள்ளன. கோவிலின் இடது புறம், தங்குமிடம் வழங்கும் அலுவலகம் அருகே இரண்டு கவுன்டர்கள் உள்ளன. மாளிகைப்புறம் கோவில் அருகே பழைய அன்னதான மண்டபத்தின் எதிரில் மூன்று கவுண்டர்கள் உள்ளன. தற்போது பழைய அன்னதான மண்டபத்தில் மூன்று கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கவுன்டரில் வங்கி கார்டுகள் பயன்படுத்தியும், இதர இரண்டு கவுன்டர்களில் பணம் செலுத்தியும் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். புதிய கவுன்டர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரசாத கவுன்டர்களின் எண்ணிக்கை, 20- ஆக உயர்ந்துள்ளது.