பதிவு செய்த நாள்
06
டிச
2016
02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த, உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ,கார்த்திகை தீப திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 12ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.இதற்காக, 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடமிருந்து கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது. மேலும், பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த, ஒரு கிலோவுக்கு, 200 ரூபாய், அரை கிலோவுக்கு, 100 ரூபாய், கால் கிலோவுக்கு, 50 ரூபாய் காணிக்கை வசூலிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று கோவில் கொடி மரம் அருகே பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த வசதியாக, காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் செலுத்தப்படும் காணிக்கை, யார், எவ்வளவு தொகை செலுத்தினர் என்ற விபரம் தெரியாது. அதனால், பக்தர்கள் தாங்கள் விரும்பும் அளவுக்கு, எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆண்டுதோறும், 25 லட்சம் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். வரும், 9ல், ராஜகோபுரம் திட்டிவாசல் அருகே, நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு துவங்கப்பட உள்ளது. இங்கு பணமாகவோ, நெய்யாகவோ காணிக்கை செலுத்தலாம்.மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு, மார்கழி மாதம் திருவாதிரையன்று நடக்கும் ஆருத்ரா தரிசனத்திற்கு பின், தீப மை பிரசாதமாக வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.