பதிவு செய்த நாள்
16
டிச
2016
05:12
தமிழ்நாட்டில் பல பழமையான சிவன்கோயில்களில் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலிலும், திருவான்மியூர், வியாசர்பாடி, மேலைத் திருக்காட்டுப் பள்ளி, திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி முதலிய இருபதிற்கும் மேற்பட்ட சிவன்கோயில்களிலும் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. வில்வத்திற்கு அடுத்தபடியாக அதிக கோயில்களில் தல மரமாக உள்ளது வன்னியே ஆகும்.
பெருமைகள் வாய்ந்த வன்னி மரத்தின் சிறப்புகள், மருத்துவ குணங்கள்: வன்னிமரம் என்றாலே விருத்தாசலம் என்ற ஞாபகம்தான் வரும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பழமையான வன்னி மரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளைப் பறித்துப் பங்கிட்டு தான் இந்த கோயிலையே கட்டி இருக்கிறார்கள்! எப்படி? முன்னொரு காலத்தில் விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர், தான் இருந்த இடத்திலேயே கோயிலைக் கட்டி விட்டு ஜீவ சமாதியும் அடைந்தார். அவர் கோயிலைக் கட்டும் வேலையாட்களுக்கு வேலை முடிந்த ஒவ்வொரு நாளின் மாலையிலும் வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துக் கூலியாக அளிப்பாராம். வியர்வை சிந்திக் கடுமையாக உழைத்தவர்களுக்கு முனிவர் அளித்த வன்னி இலைகள் பொன்னாக மாறுமாம். உழைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு இலைகளாகத் தான் இருக்குமாம். இந்தச் செய்தி கல்வெட்டுக்களிலேயே உள்ளது.
இராமபிரான் இராவணனை நோக்கிப் போர் தொடுக்கப்போகும் முன்பாக வன்னி மரத்தைத் தொட்டு வணங்கிச் சென்றதாகவும், முருகப்பெருமான் வள்ளியை மணப்பதற்காக வன்னிமர வடிவில் காட்சி தந்ததாகவும் ஐதீகம். பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் செல்வதற்கு முன்பாக தங்கள் அணிகலன்கள், ஆயுதங்களைப் பெரிய துணியில் கட்டி, வன்னி மரத்தில் மறைத்து வைத்ததாக மகாபாரதம் கூறுகிறது. விஜயதசமியில் துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில்தான் நடக்கும். மேற்கண்ட சிறப்புகளைக் கொண்ட வன்னிமரத்தடியில் அமரும் விநாயகப் பெருமானை வன்னி மரத்தடி விநாயகர் என்று சிறப்பாகக் கூறுவார்கள். இவர் இந்த மரத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி ஸ்வரூபமாக உள்ளார். வன்னி மரத்தின் இலைகள் விநாயகருக்கும், சனீஸ்வரருக்கும் உகந்ததாகக் கூறுவர்.
மக்கள் சனிதோஷம் நீங்க சனீஸ்வரரின் மனைவியான நீலாதேவியைப் பூஜித்து, விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள வன்னிமரத்தை ஒன்பது முறை சுற்றி வந்து மரத்தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை, சொத்து, சுகம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். வேலூர் மாவட்டம் பொன்னன் அருகே விநாயகபுரம் ஓட்டேரியில் உள்ள நவக்கிரக் கோட்டை கோயிலில் வன்னி மரத்திற்குப் பூஜை செய்யப்படுகிறது. இங்கு சனிபகவான் நீலா தேவி சமேதராக காக்கை வாகனத்தில் வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அவிட்ட நட்சத்திரம், மகரம், கும்ப ராசியினர் இந்த மரத்தடியில் உள்ள சனீஸ்வரரை வணங்கி வருவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.
சூரிய பகவான் வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயிலில் வன்னி மரத்தடியில் சிவனைக் குறித்துத் தவம் செய்து தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மேலும் சனிதோஷம் உள்ளவர்கள் கையில் அரிசி மாவை எடுத்துக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்கி வன்னி மரத்தை மூன்று சுற்று வலம் வந்து கையில் உள்ள மாவைப் மரத்தடியில் போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கிச் செல்லும். அப்படிச் தூக்கிச் சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டு விலகி விடும். மிகப் பெரும் தோஷங்கள் நீங்கும். சனிக்கிழமைகளில் இதைச் செய்தால் இன்னும் விசேஷம். பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைக்கும். எறும்புகளுக்கு இந்த உணவு இரண்டரை ஆண்டுகளுக்குப் போதுமானது. இதை வானில் தேவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்குச் சமம். இந்தப் பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து விடுபடலாம். இந்த மரத்தின் அடியில் இருந்து காயத்ரி மற்றும் வேத மந்திரங்களைக் கூறுவதால் பலன்கள் பலமடங்காகும். திருஞானசம் பந்தரும் வன்னி மரத்தின் சிறப்புகளை குறித்துப் பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இந்த மரத்தைப் பற்றி ரிக்வேதம், ராமாயணம், மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இந்த சமுதாய மக்கள் மரணம் அடைந்த பிறகு வன்னி மரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் காணப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம் எனச் சிறப்பிக்கப்படும் வன்னி மரம் பாலைவனங்களிலும், அதிகம் வறண்டிருக்கும் பகுதிகளிலும் தாக்குப் பிடித்து வளரக்கூடிய பசுமை மாறாத மரம். இதன் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ ரீதியாகப் பயன்படுவதால் சித்தர்கள் இதை கற்பகதரு என்று அழைக்கின்றனர்.
வன்னி மரப்பட்டையிலிருந்து கஷாயம் செய்து குடித்தால் ரத்தம் சுத்தமாகும். வன்னிமரக்காற்றை சுவாசித்தால் நமது உடலில் உள்ள சுவாசக்கோளாறுகள் நீங்கும். வன்னிக் காயைப் பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை தீரும். வன்னிகாய்ப்பொடி மார்புச் சளியை எடுக்கும் தன்மை உடையது.
வன்னி இலையை அம்மியில் அரைத்துப் புண் இருக்கும் இடத்தில் கட்டினால் புண் ஆறி விடும். எல்லா மரத்தையும் கரையான் அரிக்கும். ஆனால் வன்னி மரத்தை மட்டும் கரையான் அரிக்காது!