பதிவு செய்த நாள்
16
டிச
2016
05:12
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய ராமாயணத்தின் இலக்கிய நயமும் கருத்துச் செறிவும் கற்பனை அழகும் சொல்லில் அடங்காது. கம்பர் சிறந்த ராமபக்தர். எனினும் மற்ற தெய்வங்களை இகழவில்லை. கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருப்பதைக் காணலாம். மேலும், விஷ்ணுவே சிறந்தவர், சிவன்தான் பெரியவர் என்று வாதம் செய்வோர்க்கு சரியான பதிலையும் கொடுத்திருக்கிறார்.
அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடிச் சென்றபோது, திருக்கயிலாயத்தில் உமா மகேசுவரரை வணங்கிய நிகழ்வை ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார் கம்பர்.
ஆயதன் வடகீழ் பாகத்து
ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய்கதிர் பரப்பி அஞ்சுகதிர்
முகக் கமலம் காட்டித்
தூய பேருலகம் மூன்றும்
தூவிய மலரிற் சூழ்ந்த
சேயிழை பாகத்து எண் தோள்
ஒருவனை வணக்கம் செய்தான்.
மகாமேரு மலையின் வடகீழ் பாகத்தில் பரமேஸ்வரன் உமையோடு வீற்றிருக்கிறார். ஆயிரம் சூரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து உதித்ததைப்போல ஜொலிக்கிறார். அண்ணலுடைய ஐந்து முகங்களும் அதிசயமான தாமரை மலர்களாகத் திகழ்கின்றன. மூவுலகங்களிலும் உள்ள அடியார்கள் அர்ச்சனை செய்யும் மலர்களெல்லாம் அவரது பாதங்களில் வந்து விழுகின்றன. அவர்கள் எந்த இஷ்ட தெய்வத்தை வழிபட்டு மலர்களைத் தூவிய போதிலும், அவையெல்லாம் உமையொருபாகனையே வந்து அடைகின்றன என்று புகழ்கிறார் கம்பர். கம்பருடைய சர்வசமய சமரச நோக்கம் இப்பாடலில் தெளிவாகப் புரிகிறது.
கம்பர் தனது இஷ்டதெய்வமான ராமபிரானை விஷ்ணுவின் ஒரு அவதாரமாக மட்டும் கருதவில்லை. மும்மூர்த்திகளுக்கும் மேலான பரம்பொருள் என்றே கூறுகிறார். சுந்தரகாண்டத்தில், ஆஞ்சனேயர் ராமபிரானுடைய தெய்வீகத்தன்மையை இராவணனுக்கு கூறும் இடத்தில் இதை வர்ணிக்கிறார்.
மூலமும் நடுவும் ஈறும்
இல்லாது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த
காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்.
எல்லா மதத்தினருக்கும் பொதுவான கடவுள் ராமபிரான். ஆதி அந்தம் இல்லாத முழுமுதற்காரணன். சிவபெருமான் சூலாயுதத்தை எறிந்துவிட்டு கயிலையிலிருந்து அயோத்தி வந்து வில்லை எடுத்துக் கொண்டார். அதுபோல பிரம்மாவும் கமண்டலம், தாமரை மலரை விட்டு அயோத்தி வந்தார். மகாவிஷ்ணுவும் தம் சங்கு, சக்கரங்களையும், பாற்கடலையும் துறந்து அயோத்தி வந்து சேர்ந்தார். இந்த பாடலில் கம்பர் ராமனை மும்மூர்த்திகளின் சொரூபமாக, முழுமுதற் கடவுளாக வர்ணிக்கிறார்.
பகவான் கீதையில் தர்மத்தை ரட்சிக்க அவதாரம் செய்வதாகக் கூறுகிறார். அதே கருத்தை கம்பரும் சொல்கிறார்.
மூவர்க்கும் தலைவரான மூர்த்தியார் அறத்தை முற்றும் காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி என்று விபீஷணன் வாயிலாக விளக்குகிறார். மேலும் அங்கதன் வாயிலாக, எல்லாவற்றுக்கும் நாயகன் ராமன் என்று ஒரு பாடல் மூலம் வர்ணிக்கிறார்.
பூத நாயகன் நீர் சூழ்ந்த
புவிக்கு நாயகன் இப்பூமேல்
சீதை நாயகன் வேறுள்ள
தெய்வ நாயகன் நீ செப்பும்
வேத நாயகன் நின்ற
விதிக்கும் நாயகன் தான்விட்ட
தூதன் யான் பணித்த
மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான்.
வாலியின் புதல்வனான அங்கதன் எட்டுவித அங்கங்கள் கூடிய புத்தியுள்ளவன். நான்கு வகை பலம் பெற்றவன். பதினான்கு குண விசேஷங்களை உடையவன். அத்தகைய அங்கதன் வாயிலாக ராமபிரானை முழுமுதற்கடவுளாக விளக்குகிறார்.
மோட்சம் அடைவதற்கும், சம்சார சாகரத்தை எளிதில் கடப்பதற்கும் ராமன் திருவடிகளையே சரணாகப் பற்றவேண்டும் என்கிறார்.
சுருங்கு இடை உன் ஒரு
துணைவன் தூயதாள்
ஒருங்குடை உணர்வினோர்
ஓய்வு இல் மாயையின்
பெருங்கடல் கடந்தனர்
பெயரும் பெற்றி போல
கருங்கடல் கடந்தனன்
காலினால் என்றனன்.
சீதாதேவி அனுமனிடம், நீ இக்கடலை எப்படி கடந்தாய் என்று கேட்டாள். அதற்கு பதிலாக அனுமன் கூறியது மேற்சொன்ன பாடல்.
தாயே, உம் கணவனின் திருவடிகளை தியானித்து, ஒழிவில்லாமல் பொங்கிக் கொண்டிருக்கும் மாயா சமுத்திரத்தை தூயவர்கள் தாண்டுகின்றார்களே. நானும் அவர்களைப்போல இச்சிறு கடலைத் தாண்டி வந்தேன் என்கிறார்.
கம்பர் ஒரு பாடலில் எல்லா மதங்களையும் பற்றி குறிப்பிடுகிறார்.
ஒன்றே என்னில் ஒன்றேயாம்
பலவென்று உரைத்தால் பலவேயாம்
அன்றே என்னில் அன்றேயாம்
ஆமென்று உரைக்கில் ஆமேயாம்
இன்றே என்னில் இன்றேயாம்
உளதென்று உரைக்கில் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கென்னோ பிழையம்மா.
கடவுள் ஒருவரே என்று நினைத்தால் அவர் ஒருவரே. பலர் உண்டென்று நினைத்தால் அதுவும் சரியே. அவருக்கு குணங்களே இல்லை - நிர்குண பிரம்மம் என்று சொல்வதும் சரியாகும். அவருக்கு கல்யாண குணங்கள் பலவுண்டு என்று சொல்வதும் சரியே. கடவுளே இல்லையென்று சொல்லும் நாஸ்திக வாதம்- இன்றே என்னில் இன்றேயாம் என்று விளக்கப்படுகிறது. கடவுள் உண்டு என்று நம்பினால் அவர் கட்டாயம் இருக்கிறார். இப்படியாக கடவுள் தத்துவம் கம்பரால் பேசப்படுகிறது.
எம்மதமும் சம்மதமே என்ற பெருங்கொள்கையை - ஒப்பற்ற ஞானத்தை, சரயூ நதியின் பெருக்கை சிறப்பிக்கும் பாடலாகப் பாடுவதைக் காண்போம்.
கல்லிடைப் பிறந்து போற்று
கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும்
இயம்பரும் பொருள் ஈதென்னத்
தொல்லையில் ஒன்றே ஆகித்
துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெரும் சமயம் சொல்லும்
பொருளும் போல பரந்ததன்றே.
அயோத்தியில் ஓடும் சரயூ நதி மலையில் தோன்றி கடலில் சேருகிறது. ஆதிப்பரம் பொருள் போலவே அதுவும் முதலில் ஒன்றாகத்தான் இருக்கிறது. பிறகுதான் பல நீராடுதுறைகளாகவும், கால்வாய்களாகவும், கிளைகளாகவும் பிரிந்து உதவுகிறது. பரம்பொருள் ஒன்றேயாகிலும் பலவிதமாக வழிபடும் சமயங்களாகப் பிரிந்ததுபோல், ஆதியில் ஒன்றாக இருந்த நதியும் பலவாறாகப் பிரிந்ததாம். கடைசியில் நதியும், கடலில் ஐக்கியமாகி விடுகின்றது. அதுபோலவே பெரிய பல சமயங்களும் ஆதியில் பரம்பொருளிலிருந்து தோன்றி, மக்களை நல்வழிப்படுத்த அவரவர் புத்திக்கு அனுசரித்து, உபதேசங்களும் வழிபாடுகளும் அமைத்து, பின் பரம்பொருளிலேயே நிறைவு பெறுகின்றன.
கம்பர் கடவுள் வணக்கம் பாடும்போது, உலகம் யாவற்றையும் தோற்றுவித்தும், அவற்றை நிலைபெறச் செய்தும், பேணி வளர்த்தும், கடைசியில் அழித்தும் என எல்லையற்ற விளையாடல் புரியும் ஒப்பற்ற பரம்பொருளே காவியத்தலைவன் அவனுக்கே வணக்கம் உரியது என்கிறார்.
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையாரவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!
எல்லாவற்றுக்கும் மேலாக கம்பருக்கு பகவானுடைய நாம ஜெபத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை ஒரு பாடலால் விளக்குகிறார்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால்
எவ்வளவு நம்பிக்கையோடு நவில்கின்றார். ராமநாமத்தை உச்சரிப்பதால் நலன்களும், எல்லாவிதமான செல்வங்களும் கிட்டும். எண்ணிய பொருள் கைகூடும். தீமைகளும் பாவங்களும் உருத்தெரியாமல் போய்விடும். கணக்கற்ற பிறவியெடுத்து அல்லல்படுகிறோம் அல்லவா? அந்த துன்பமும் தீர்ந்து போகும். இவையெல்லாம் ராமா என்று உச்சரிப்பதால் கிடைத்துவிடும்.
கம்பரின் அடிபற்றி பரம்பொருள் ஒன்றே என்பதை உணர்ந்து, அவரவருக்கு விருப்பமான தெய்வத்தை உள்ளன்போடு வணங்கி, மற்ற தெய்வங்களை இகழாமல் வாழ்வோம். இகத்திலும் பரத்திலும் இறைவனுடைய அருளைப் பெறுவோம்.