திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும்‚ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று காலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3:00 மணிக்கு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி உடையவர் சன்னதியை வந்தடைந்தார். அங்கு மண்டகபடியும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க பரமபதவாசலுக்கு பூஜை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவை சாதிக்க‚ சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நம்மாழ்வார் மங்களாசாசனம், நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கம், இராபத்து உற்சவம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்‚ ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.