பதிவு செய்த நாள்
17
அக்
2011
11:10
தூத்துக்குடி : தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நேற்றுமுன்தினம் ஐந்து கருடசேவை பெருவிழா விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய அம்சமாக புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா ஐந்து கருடசேவை விழாவாக நடந்தது.நேற்றுமுன்தினம் காலை கோபூஜையுடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து சுப்ரபாதபாராயணம், பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல், இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து வைகுண்டபதி பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக பெருமாள் கற்கள் அடங்கிய நகைகளால் அற்புதமாக ஜொலித்தார். திருப்பதிக்கு சென்று வந்த திருப்தி தூத்துக்குடியில் கிடைத்ததாக பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். காலையில் இருந்தே வைகுண்டபதி பெருமாளை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் சிறப்பான முறையில் வழிபட வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்தபெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெருமாளை தரிசித்த பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயரை தரிசித்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் பாலாஜி செய்தார். இரவு ஐந்து கருட சேவை விழா நடந்தது. வைகுண்டபதி பெருமாள், ரெங்கநாதபெருமாள், வரதராஜபெருமாள், ஆதிஜெகநாதபெருமாள், வெங்கடாஜலபதி பெருமாள் ஆகிய ஐந்து அவதாரங்களில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயிலில் இருந்து யானை, தாரை, தப்பட்டங்கள், 24 பேர் கொண்ட கேரள செண்டைமேளம், 5 செட் மங்களவாத்தியம், 30 பேர் கொண்ட நாதஸ்வர குழுவினர் முன் செல்ல ஐந்து பெருமாளும் ரதவீதிகளில் உலா வருதல் நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. தனித்தனியாக ஐந்த பெருமாளுக்கும் தொடர்ச்சியாக பூஜைகள் நடந்தது.