பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 58வது ஆண்டு பொன்விழாவையொட்டி, மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா கடந்த வாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக வேல்மாறல் வழிபாடு நடந்தது. அதன்பின், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களுக்கு வைரவேல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். அதன்பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் வைரவேல் வைக்கப்பட்டு, பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு சென்றனர். பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் கூறுகையில், ‘வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைரவேல் வாங்கப்பட்டு, தொடர்ந்து ஒரு வாரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வைரவேல் கொண்டு செல்லப்படுகிறது. வரும், 12ம் தேதி காலை வைரவேல் பழநி முருகன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்த பின், மீண்டும் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்படும்,’ என்றனர்.