காஞ்சிப்பெரியவர், மடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன், சீதாலட்சுமி தம்பதி, தங்கள் மகள் கவுரியுடன் அங்கு வந்தனர். பெரியவரிடம், கவுரிக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவாகி, திருமண ஏற்பாடாகி இருக்கும் விஷயத்தை தெரிவித்தனர். பணவசதி இல்லாத தங்களுக்கு கல்யாணசீர் கொடுக்க பெரியவர் உதவி புரிய வேண்டும் என்றும் வேண்டினர். பெரியவர் அவர்களை தனியாக உட்காரச் சொல்லி விட்டு மற்ற பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அன்று மாலை பெரியவரைத் தரிசிக்க, ஒரு தம்பதியினர் தங்கள் மகனுடன் அங்கு வந்தனர். அவர்கள் அருகில் வந்ததும் பெரியவர், பரமேஸ்வரன் குடும்பத்தையும் வரவழைத்தார். “நீங்கள் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை பையன் இவன் தானா?” என்று பரமேஸ்வரனிடம் கேட்டார். “ஆமா.... பெரியவா...” என்று தெரிவித்தார். பெரியவர் பெண்ணிடமும், மாப்பிள்ளையிடம், இந்த கல்யாணத்திற்கு சம்மதா? என்று கேட்க, அவர்களும் தலையசைத்தனர். மாப்பிள்ளையின் பெற்றோரிடம், “பெண் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காதீங்க...! பட்டுப் புடவையும் வேண்டாம். எளிமையா கல்யாணம் நடத்துங்க!” என்று சொல்லி ஆசியளித்து அனுப்பினார். அடுத்து வந்த தை மாத முகூர்த்தத்தில் கவுரி கல்யாணம் கெட்டிமேளம் ஒலிக்க சிறப்பாக நடந்தது. புதுமணத் தம்பதியான மணமக்கள் மீண்டும் பெரியவரின் ஆசியைப் பெற காஞ்சிபுரம் புறப்பட்டனர்.