Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பதினைந்தாம் அத்தியாயம்
பகவத்கீதை | புரு÷ஷாத்தம யோகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 அக்
2011
04:10

பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புரு÷ஷாத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.

இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.

ஸம்ஸார விருக்ஷம் 1-2 -மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 -எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 -பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 -ஜீவதத்துவ விளக்கம் 7-9 -ஞானக்கண் 10-11 -பரமாத்மனது சொரூபம் 12-15 -ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

ஸ்ரீபகவாநுவாச

1. ஊர்த்வமூலமத:ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் 

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஊர்த்வமூலம்-மேலே வேர்கள், அத:ஸாகம் - கீழே கிளை, அஸ்வத்தம்-அரச மரம, அவ்யயம்-அழியாதது, ப்ராஹு-என்று கூறுவார்கள், யஸ்ய சந்தாம்ஸி பர்ணாநி-எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ, தம்-சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை, ய: வேத-எவர் அறிகிறாரோ, ஸ: வேதவித்-அவனே வேத மறிவோன்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.

அச்வத்தம் என்பது அரசமரம். ஈண்டு அது ஆலமரம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அரசமரம் ஆலமரம் இவையிரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவைகள்; ஆலமரம் உபமானத்துக்கு முற்றிலும் பொருத்தமுடையதாகிறது. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலைசெய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக்கொண்டு கீழ் நோக்கி வருகிறது. அச்வத்தம் என்னும் சொல்லுக்குப் பொருள் ஒருநாள் இருப்பது போன்று அடுத்தநாள் அது இருப்பதில்லை என்பதாகிறது. ஸம்ஸாரமாகிய ஜகத் அத்தகையது. ஆலம் விழுது மேலே சத்தை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வருவது போன்று மாயப்பிரபஞ்சம் மேலே பரம்பொருளிடத்திருந்து சத்தை வாங்கிக்கொண்டு கீழே பிரகிருதியாகப் பரிணமித்து வருகிறது. தோன்றாநிலையில் சக்தி பிரம்மத்துக்கு அபின்னமாயிருக்கிறது. பிரம்மம் இருக்கும்வரை சக்தியும் இருக்கிறது. ஆகையால் ஸம்ஸாரத்துக்கு அது முடிவற்ற முதற்காரணமாகிறது. அச்சக்தி மூல பிரகிருதியாக, மஹத் தத்துவமாக, அகங்கார தத்துவமாக இப்படியெல்லாம் கிளைகளாகக் கீழே பிரிந்து வருகிறது. கீழே வரவர அது ஸ்தூலமாகப் பரிணமிக்கிறது.

பிரபஞ்சம் முழுதும் அந்த அரசமரத்தோடு ஒப்பிடப்படுகிறது. இலைகள் இல்லாவிட்டால் மரம் உருப்படாது. அங்ஙனம் இயற்கையை உருப்படுத்தி வைத்திருப்பது வேதம். இவ்வுலக சம்பந்தமான அறிவைப் புகட்டுகின்ற நூல்கள் அனைத்தும் சேர்ந்து வேதம் எனப் பொருள்படுகிறது. பண்டை நான்மறை மட்டும் வேதமல்ல. நவீன ரசாயன சாஸ்திரம், இயற்கை நூல் ஆகிய அனைத்தும், எல்லா மொழிகளும் எல்லா மொழிகளிலுள்ள நூல்களும் சேர்ந்து வேதம் எனப்படுகின்றது. நலம், கேடு ஆகிய இரண்டையும் பெறுதற்கான வழிகளை வேதம் விளக்குகிறது. பிரம்ம ஞானம் அடையும் வரையில் இப்பிரபஞ்ச வாழ்க்கைக்கு முடிவில்லை. அது நீடூழி நிலைத்திருக்கிறது. அக் காரணத்தை முன்னிட்டே அது அவ்யயம் அல்லது அழிவற்றது எனப்படுகிறது. எழுதிவைத்த நூலைப் படிப்பவன் வேதவித்து ஆகான்; பிரபஞ்ச நடைமுறையை உள்ளபடி அறிந்துகொள்பவன் வேதத்தை அறிபவன் ஆகின்றான். நல்லறிவு பெற முயலுபவனுக்கு மொழியினுடைய துணையைவிட இயற்கையின் நடைமுறையின் துணை மிகவும் முக்கியமானது.

ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்திலிருக்கும் போது உருத்தெரியாத ஹோ என்ற சப்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்கிழங்குக்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் இம்மாதிரியாக மனிதர்கள் பேரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாகக் கேட்கிறான். ஒருவன் ஈசுவரனிடமிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருக்கும் வரையில் அவன் குழப்பத்திலும் காரண காரிய வாதப்பிரதிவாத அமளியிலுமே இருப்பான். ஆனால் அவன் ஈசுவரனை நெருங்குங்கால் காரண காரிய வாதம், வாதப் பிரதி வாதம் எல்லாம் நின்றொழிகின்றன. தெய்விக ரகஸ்யங்களெல்லாவற்றையும் வெகு தெளிவாயும் ஸ்பஷ்டமாயும் அறிந்துகொள்கிறான்.

முக்குணமயமாகப் பிரகிருதி இருப்பதும் முக்குணத்தைக் கடந்து அப்பால் பரமாத்மா இருப்பதும் பதினான்காவது அத்தியாயம் விளக்கியது. இந்த அத்தியாயம், அந்தப் பரமாத்மாவிடத்திருந்து இப்பிரபஞ்சம் கிளையாகக் கீழே இறங்கிவந்திருக்கிறது என்று விளக்குகிறது. அம்பிகை துர்க்காதேவியின் வடிவு இந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துக்களை நன்கு விளக்குகிறது. தரையின் மீது கன்னங்கரேலென்று நிற்கிற மஹிஷாசுரனை அம்பிகை மர்த்தனம் புரிகின்றாள். அவள் சிங்கத்தின்மீது உயர நின்றுகொண்டிருக்கிறாள். மஞ்சள் மேனியுடைய அவள் சிவப்பு வஸ்திரம் அணிந்திருக்கிறாள். ஆயுதங்கள் பல கையாளுகின்றாள். மஹிஷாசுரன் தமோகுணத்தின் பிரதிநிதியாகவும், துர்க்கை ரஜோகுணத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள். அம்பிகையின் தலைக்குமேல் சதாசிவம் தூவெண் வடிவெடுத்து ஆழ்ந்து ஆத்ம நிஷ்டையிலிருக்கிறார். அவரது வெண்ணிறம் சத்துவகுணத்தைக் காட்டுகிறது. அவர் தன்னில் தானாயிருப்பது பரதத்துவத்தை விளக்குகிறது. உருவமில்லாத அவரிடத்திருந்து சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் மூன்று வடிவெடுத்து ஒன்றன் கீழ் ஒன்றாக வருகின்றன. மேலே போகப் போகக் கர்மத்தின் போராட்டம் குறைகிறது. கீழே எல்லாம் ஒரே அமளி என்பதை அம்பிகையும் மஹிஷாசுரனும் புரியும் போர் விளக்குகிறது. அக்கருத்தை அடுத்த சுலோகம் தெளிவுபடுத்துகிறது.

2. அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸாகா
குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி
கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே 

தஸ்ய குணப்ரவ்ருத்தா-(சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால், விஷயப்ரவாலா:-(புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய,
ஸாகா:-தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள், அத: ஊர்த்வம் ச ப்ரஸ்ருதா:-கீழும் மேலுமாக பரவியுள்ளன, மநுஷ்யலோகே கர்ம அநுபந்தீநி-மனித உலகில் கர்ம பிணைப்புகளாக, மூலாநி-அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும், அத ச-கீழும் (மேலும்) ஆக, அநுஸந்ததாநி-(எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.

பொருள் : அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.

சம்சாரமாகிய இப் பிரபஞ்சத்துக்கு அரசமரமே மேலும் தகுந்த உபமானமாக அமைகிறது. அதன் கிளைகள் மேலும் கீழும் நாலாபக்கமும் பரவியிருக்கின்றன. இப் பிரபஞ்சம் என்ற மரத்துக்கு மிக மேலானதாக இருக்கும் கிளை பிரம்மாவும் பிரம்ம லோகமுமாம். கீழான கிளை மானுடலோகமும் மற்றுமுள்ள அஃறிணை உயிர்களுமாம். ஞானத்துக்கு ஏற்ப மேலான பிறவியும், வெறும் கர்மத்துக்கு ஏற்பக் கீழான பிறவியும், ஞானமும் கர்மமும் கலந்திருப்பதற்கேற்ப நடுத்தரமான மானுடப்பிறவி போன்றவையும் அமைகின்றன. கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவைகள் தளிர்விடும். இந்திரியங்கள் வாயிலாக இந்தியார்த்தங்களில் உழல்வது இந்த சம்சாரத்துக்குத் தளிர்களாகின்றன. இந்தக் குணங்கள் இருக்கும் வரை கிளைகள் தளிர்த்துக்கொண்டேயிருக்கும்.

ஒரு மரத்துக்கு இரண்டுவிதமான வேர்களிருக்கின்றன. ஒன்று ஆணிவேர்; மற்றவைகள் சல்லிவேர்; மாயாஸஹிதனாகிய ஈசுவரனிடத்திருந்து ஜகத் கீழே வந்திருப்பதால் ஈசுவரன் இந்த அசுவத்தத்துக்கு மேலே உள்ள ஆணிவேர். பூவுலகில் விதவிதமான கர்மங்களாகப் பரிணமித்து வருவது சல்லிவேர்கள். சல்லி வேர்களை இடையிடையே களைவதால் மரம் பண்படுகிறது. அங்ஙனம் பூவுலகில் கர்மங்களைச் செப்பனிடுவதால் மனிதன் திருந்தியமைகின்றான். அவனுடைய இயல்பை மாற்றுதற்குக் கர்மம் பயன்படுகிறது. நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி மனிதனைப் பிறப்பு இறப்பு மயமான பூவுலகில் பிடித்து வைத்திருப்பதும் கர்மம் என்கின்ற வேர். இது ஜீவர்கள் எல்லார்க்கும் பொதுவானதால் வேர் எங்கும் பரவியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

3. ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூலம
ஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா 

அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல, இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை, ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை, ஸுவிரூடமூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை, த்ருடேந அஸங்கஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு.

பொருள் : ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப்பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,

இப்படி ஈண்டு இயம்பப்பட்ட பிரபஞ்சம் என்ற அசுவத்த மரத்துக்கு நிலைத்த வடிவம் ஒன்றுமில்லை. அதனிடத்து நாம் ஒரு வடிவத்தைக் காணுமுன்பு அது இன்னொரு வடிவெடுத்துவிடுகிறது. பார்க்கும்பொழுதெல்லாம் அதற்குப் புதியதொரு வடிவம் வருகிறது. நிலைத்த சொந்த வடிவம் ஒன்று அதற்கில்லை. இது எப்பொழுது ஆரம்பித்ததென்று யாருக்கும் தெரியாது. இதற்கு முடிவு ஏதேனும் உண்டா? பிரம்மஞானம் அடைந்தவனுக்கு இது முடிவடைகிறது. மற்றவர்களுக்கு இது முடிவில்லாததாயிருக்கிறது. துவக்கமும் முடிவும் காட்டாத இது இடையில் எப்படி இருக்கிறது? இதன் இருப்பு எத்தகையது? - இதுவும் விளங்குவதில்லை. ஆக, இதை முழுதும் விளக்க யாரே வல்லவர்! மரத்தை வெட்டுதற்குக் கோடரி வேண்டும். அங்ஙனம் மாயா காரியமாகிய பிரபஞ்ச வாழ்க்கை என்ற மரத்தை வெட்டுதற்குப் பற்றின்மை அல்லது வைராக்கியம் என்ற வாள் ஒன்றே தகுந்தது. பற்றின்மை எவ்வளவு வலியதோ அவ்வளவு விரைவில் சம்சார விருக்ஷம் வெட்டப்படும்.

வண்ணாத்திப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. அதுபோல உலகப்பற்றுள்ள ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக்கொள்கிறது. ஆனால் அந்தப் புழு ஓர் அழகிய வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கும்போது, கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தையும் காற்றையும் ஆனந்தமாய் அனுபவிக்கிறது. அதுபோல விவேகம் வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால், உலகப்பற்றில் உழலும் ஆத்மாவானது மாயையாகிய வலையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படக்கூடும்.

4. தத: பதம் தத்பரிமார்கிதவ்யம்
யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ 

தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான, ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ, தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.

பொருள் : அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

உலகப்பற்று அறவே நீங்குவது எதிர்மறைச் செயல். அது மட்டும் போதாது. பிறகு அது உடன்பாட்டுச் செயலாக மாறவேண்டும். பிரம்ம பதத்தை ஆவலோடு தேடுதல் அவசியமாகிறது. பிரபஞ்ச வாழ்க்கைக்கும் பிரம்மபதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒன்று பிறவிப் பெருங்கடலாகப் பரிணமிக்கின்றது. மற்றொன்று பிறப்பு இறப்பைக் கடந்த பெருநிலை. அது முழுமுதற் பொருள் என்றும் ஆதி புருஷன் என்றும் அழைக்கப்படுகிறது. அது அகண்ட சச்சிதானந்த வஸ்து. கடலினின்று மேகம் வருவது போன்று கர்ம சொரூபமாயுள்ள தொல்லுலகம் அப்பரம புருஷனிடத்திருந்து வந்துள்ளது. அத்தொல்லுலகம் தோன்றுவதாலும் பரம புருஷனுக்கு லாப நஷ்டம் ஒன்றுமில்லை. கானலினின்று கானல் நீர் தோன்றுவதுபோன்று அவனிடத்து உலகம் தோன்றி ஒடுங்குகிறது. அந்த ஆதி புருஷனிடத்து அடைக்கலம் புகுதலே சம்சார விருக்ஷம் திரும்பவும் தழையா திருக்கும்படி செய்தற்கு உற்ற உபாயம்.

கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓடிப்போகிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடிக்குமிடத்து, அது உன்னிடமிருந்து ஓடிப்போகிறது.

பற்று நீங்கிப் பரத்தைச் சார்ந்திருப்பது இனித் தெளிவுபட விளக்கப்படுகிறது :

5. நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞைர்
கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் 

நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள், ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர், ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

பொருள் : செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

மனத்தகத்து அமைந்துள்ள மாசுகளெல்லாம் நீங்கப்பெறுதல் ஒரு புறம். தீவிரமாகப் பரமாத்மாவிடத்து நாட்டம் கொள்ளுதல் மற்றொரு புறம். ஒரு சாதகனிடத்து இந்த இரண்டு பாங்குகளும் சேர்ந்து அமைகின்றவளவு அவன் விரைந்து பரிபக்குவமடைகிறான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்தவனுக்குக் கேடு என்பது இல்லை.

பந்தப்பட்ட ஆத்மா மனுஷ்யனாகும்; மாயையாகிய சங்கிலியில் கட்டுப்படாத ஆத்மா ஈசுவரனாகும்.

6. ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம 

யத் கத்வா-எதை அடைந்த பிறகு, ந நிவர்தந்தே-திரும்பி வருவதில்லையோ, தத் ஸூர்யோ ந பாஸயதே-அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை, ந ஸஸாங்க: ந பாவக:-சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை, தத் மம பரமம் தாம-அதுவே என் மேலான வீடு (பரம பதம்).

பொருள் : அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

கடலினுள் பாய்ந்த நதி கடலாகிறது. அங்ஙனம் பரத்தைச் சார்ந்த மனிதன் பரவெளியில் ஒன்றுபடுகிறான். அதுவே சித் ஆகாசம் எனப்படுகிறது. இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்குமா? விளக்காது. அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்கமாட்டா. இருக்கிறேன் என்ற உணர்வை அந்த உணர்வே விளக்குகிறது. அந்த உணர்வு அல்லது பிரக்ஞை யாண்டும் நிலைத்துள்ளது. அது தெளிவடைந்த நிலையே பரமபதம் எனப்படுகிறது. தெளிவடைந்த பிறகு அது அகண்டாகாரமாய் விரிகிறது. அதன்கண் போக்குவரத்து இல்லை; பிறப்பு இறப்பு இல்லை. கால தேச வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன. இப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவபோதத்துக்கு வருகிறதில்லை.

கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு (விவேகம்) ஒழிந்து; மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுது நான் என்பதும் நீ என்பதும் உலகமென்பதும் இரா. ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்தப் பிரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.

ஜீவாத்மாவானது பரமாத்மாவுக்குப் புறம்பானதாயிருந்து பிறகு பிரம்மஞானத்தால் அதற்குரியதாகின்றதா? விடை வருகிறது :

7. மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி 

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா, மம அம்ஸ ஏவ-எனது அம்சமே! ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள, மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும் கர்ஷதி-ஈர்க்கிறது.

பொருள் : எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.

ஸநாதன - எக்காலத்தும் என்று சொல்லுவதன் கருத்து அது ஜீவனாக இருக்கும்பொழுதும் பரமாத்மாவுக்கு உரியதே. பரமாத்மாவுக்கு வேறாக இருந்து பிறகு அதில் கலத்தல் என்பதல்ல. அறியாமையினால் பிரகிருதியில் தன்னைக் கட்டுண்டவனாக நினைத்துக்கொள்பவன் ஜீவாத்மா. பிரகிருதியின் சேர்க்கையாலே அவனுக்கு இந்திரியங்கள் உண்டாகின்றன. அந்நிலையில் ஜீவன் போகியென்று அழைக்கப்படுகிறான். போகியாக போகத்தில் கட்டுண்டிருப்பவர்களெல்லாம் ஜீவலோகத்திலிருப்பவர்களே. இந்திரிய நிக்கிரகம் செய்கின்றபொழுது ஒருவன் யோகியாகின்றான். புலனடக்கத்துக்கு ஏற்றவாறு அவன் பரத்தைச் சார்ந்தவனாகிறான்.

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வுக்குத் தகுந்த உபமானம் ஒன்று சொல்லலாம். பானைக்குள் உள்ள வெளி கடாகாசம் எனப்படுகிறது; பரந்து எங்கும் நிறைந்துள்ள வெளி மஹாகாசம் எனப்படுகிறது. கடாகாசம் எப்பொழுதும் மஹாகாசத்துக்குள்ளேயே இருக்கிறது. பானையை உடைப்பதால் அதற்குள் உள்ள ஆகாசத்துக்கு ஒரு கேடும் வருவதில்லை. கடாகாசம் என்ற பெயர் தரித்திருக்கும்பொழுதும் அது மஹாகாசமே.

பிரகிருதியோடு வைத்த தொடர்வால் ஜீவன் கர்த்தாவென்றும் போக்தாவென்றும் சொல்லப்படுகிறான். கர்த்தா போக்தா வென்ற உபாதியை நீக்கிவிட்டால் ஆத்மாவின் எதார்த்த நிலை வந்தமைகிறது. ஜீவாத்மாவாக இருக்கும்போது அது பரமாத்மாவின் அம்சம். ஜீவபோதம் அற்றுப்போனால் எஞ்சியிருப்பது பரமாத்மாவே.

ஜீவனின் உண்மை ஸ்வபாவம் சச்சிதானந்தமே. இவ்வளவு உபாதிகள் எல்லாம் அகங்காரத்தினால் உண்டாயின. ஆதலால் ஜீவனுக்குத் தன் உண்மை சுபாவமே மறந்துபோயிற்று.

ஜீவன் உபாதியைப் பெறும் விதம் எப்படி? விடை வருகிறது :

8. ஸரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர:
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஸயாத் 

வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல, ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும், யத் உத்க்ராமதி - எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ, ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு, யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.

பொருள் : கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.

உடலை ஆளும் தன்மையுடையவனாதலால் ஜீவன் இங்கு ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறான். காற்று தன்னளவில் ஒரு வித மணமும் இல்லாதது. புஷ்பத்தோடு வைக்கிற சேர்க்கையால் அதற்கு மணம் உண்டாகிறது. அந்த மணத்தைப் பிறகு சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும். ஜீவன் பிரகிருதியோடு வைக்கிற தொடர்வால் உபாதியுடையவனாகிறான். பிரகிருதியினிடத்துப் பற்று நீங்குகிறவளவு ஜீவன் சுத்த சைதன்யமாகிறான். ஆனால் பிரகிருதியில் பற்று வைத்திருக்கிறவளவு ஜாலவித்தைக்காரன் போன்று அவன் நடந்துகொள்கிறான். ஓரிடத்தில் தன்னுடைய சாமான்களையெல்லாம் விரித்துவைத்து வேடிக்கை பண்ணுகிறான். பிறகு அவைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு இன்னோர் ஊருக்குப் போகிறான். அங்ஙனம் ஜீவன் மனதையும் இந்திரியங்களையும் பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான்.

இந்திரியங்களைக்கொண்டு ஜீவன் என்ன செய்கிறான்? விடை வருகிறது :

9. ஸ்ரோத்ரம் சக்ஷú: ஸ்பர்ஸநம் ச ரஸநம் க்ராணமேவ ச
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே 

அயம் ஸ்ரோத்ரம் சக்ஷú: ச-கேட்டல், காண்டல், ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம், அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு, விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

பொருள் : கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

ஐம்பொறிகளும் ஐந்துவித ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல் இல்லாத வீட்டுக்குள் ஒருவனை அடைத்து வைத்துவிட்டால் வெளியுலகோடு அவன் தொடர்வு வைக்க முடியாது. காற்றும் வெளிச்சமும் நீரும் உணவுமில்லாவிடில் அவன் செத்துப் போவான். ஐம்பொறிகள் ஐந்து பூதங்களோடு தொடர்வு வைக்க உதவுகின்றன. ஆகாசத்தின் தன்மாத்திரையாகிய ஓசையைக் கேட்கக் காது உதவுகிறது. அக்னியின் தன்மாத்திரையாகிய வடிவத்தைக் காணக் கண் உதவுகிறது. வாயுவின் தன் மாத்திரையாகிய ஊறு அல்லது ஸ்பரிசத்தை உணர்தற்கு உடல் உதவுகிறது. நீரின் நீர்மையாகிய சுவையை அறிய நாவு உதவுகிறது. நிலத்தின் பாங்காகிய நாற்றத்தைப் பெற நாசி பயன்படுகிறது. மனதோ இவ் ஐந்துக்கும் பொது. உடல் என்னும் கோட்டைக்குள் இருக்கும் ஜீவனானவன் ஐம்பொறிகளின் வகை தெரிந்துகொள்ளுதற்கு மனம் என்னும் கருவியே பாலம்போன்று அமைந்துள்ளது. வெளியுலகினின்று இன்பதுன்ப மயமான செய்திகள் அவனுக்கு இங்ஙனம் எட்டுகின்றன.

10. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷúஷ: 

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும், ஸ்திதம் வா-நிற்கையிலும், புஞ்ஜாநம் வா - உண்ணுகையிலும், குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும், விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை, ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

பொருள் : அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

அறிவிலிகளுக்கு ஸ்தூல உடல் காட்சியும் உடலின் மூலம் வெளியுலகினின்று பெறும் இன்பதுன்பம் மட்டும் விளங்குகின்றன. உடலுக்குள் தங்களது மேலாம் சொரூபமாகவிருக்கும் உத்தமனைக் காண அவர்களுக்கு இயலாது. இந்திரியங்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள். விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர். அறிவுடையவர்க்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும். அங்ஙனம் ஞானக் கண்ணுடையார்க்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.

மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும், வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே. அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாயிருக்கிறான். மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும் ஈசுவரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.

ஞானக்கண்ணைப் பெறுவது எங்ஙனம்? விடை வருகிறது :

11. யதந்தோ யோகிநஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்திதம்
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ: 

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள், ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர், ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள், அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

பொருள் : முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.

யோகி, ஆத்ம. பரிபாகம் அடையாத அறிவிலி ஆகிய இருவர்க்கும் முயற்சி பொதுவானது. முயற்சியின்றி ஒன்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மனபரிபாகமில்லாத மனிதன் வெறும் மாடுபோல் உழைக்கிறான். வெறும் வினைப்பயனே அதன் விளைவு ஆகும். முயலுகின்ற யோகியோ ஆத்ம பரிபாகம் அடைகிறான். உலகக் கிருத்தியங்களைச் செய்து சாதிப்பதற்கிடையில் ஒழுக்கத்தாலும் தவத்தாலும் யோகியானவன் மனதைப் பண்படுத்துகிறான். அந்தர்முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான் அங்ஙனம் சித்தசுத்தி அடையப்பெற்று, அது ஆத்ம சொரூபத்தில் தேங்கியிருப்பது ஆத்ம தரிசனத்துக்கு இன்றியமையாததாகிறது.

நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம். அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.

பரமாத்ம தரிசனம் அடைந்தவர்கள் அதை எப்படிக் காண்கிறார்கள்? விடை வருகிறது :

12. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேऽகிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் 

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி, அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும், யத் அக்நௌ ச - தீயிலுள்ளதும், தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

பொருள் : சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப் பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்ளலாம். நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடத்திருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள். எங்கு வெளிச்சம் இருக்கிறதோ அங்கு சத்துவகுணத்தின் தோற்றமுண்டு. மினுக்கெடுத்த சுவரில் அல்லது கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோன்று சத்வ குணத்திலே ஆத்ம சைதன்யம் ஒளிர்கிறது. ஆத்ம சைதன்யத்தை விளக்குகின்ற சத்வகுணமும் பரமாத்மாவினிடத்திருந்து வந்தது. சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கிறது என்று விளக்குவதுபோன்று ஆத்ம சைதன்யம் நான் இருக்கிறேன் என்ற பிரக்ஞையை விளக்குகிறது. சூரியனிடத்து இருப்பது ஜடப்பிரகாசம். நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியோ ஆத்மப் பிரகாசம். ஜடப்பிரகாசத்துக்கு மூலகாரணமாயிருப்பது ஆத்மப் பிரகாசம். அது எப்படி என்று ஆராய்வோம். இரண்டு அறைகளினுள்ளே சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. ஓர் அறையினுள் ஆள் யாருமில்லை. சூரிய வெளிச்சம் இருக்கிறது என்று பொருள்படுத்துவார் ஆங்கில்லை. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அந்த வெளிச்சத்துக்கும் கிடையாது. அவ் அறையினுள் வெளிச்சம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. மற்ற அறையில் வெளிச்சம் இருக்கிறது. மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அவ்வெளிச்சம் இருப்பதற்கும் அம்மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடத்திருந்து வந்துள்ள ஜடப் பிரகாசத்தை ஈசுவரன் என்னும் ஆத்மப்பிரகாசம் அல்லது ஆத்ம சைதன்யம் அறிகிறது. அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியன அறியப்படு பொருள்களாம்.

மேலும் அந்த ஆத்ம சைதன்யம் உயிருக்கு உயிராய் இருக்கிறது. எப்படியெனின் :

13. காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: 

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து, ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன், ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி, ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

பொருள் : நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.

ஈசுவர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் வியாபித்து அதை உறுதியாய்த் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சராசரங்களெல்லாம் அதனிடத்திருந்து நிலைபேறு பெறுகின்றன. சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடத்திருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம் செழித்து வளர்கின்றன என்பதும், அவ்வவைகளின் இயல்பை நன்கு பெற்று வருகின்றன வென்பதும் கோட்பாடு. இங்ஙனம் உயிர்களைத்துக்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவினிடத்திருந்து வருகிறது.

அவரிடத்திருந்து வரும் மூன்றாவது வல்லமை யாதென்று இனி விளக்கப்படுகிறது :

14. அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித:
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் 

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன், ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி, வைஸ்வாநர: பூவா - வைசுவாநரன் என்கிற அக்னியாகி, சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

பொருள் : நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்கிற பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு உணவு நான்கு விதங்களில் அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல் ஆகிய நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டிபோன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது. இளம் நுங்கு போன்றது உறிஞ்சப்படுகிறது. தேன் நக்கப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது. இவையாவையும் ஜீரணம் செய்வது வைசுவானரன் என்ற அக்கினி.

ஆற்றல் சொரூபமாக இருப்பதுமல்லாமல் மற்றொரு மகிமை பகவானிடத்துண்டு. அதாவது :

15. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம் 

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான், ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன, ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ - எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான், வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

பொருள் : எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

எல்லாருடைய உள்ளத்திலும் பிரக்ஞை அல்லது அறிவு சொரூபமாக அவர் இருக்கிறார். ஆதலால் முன் செய்தவைகளைப் பற்றிய ஞாபகமும், ஓர்ந்து உணரவேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது அவைகளை அழித்துவிடுதலும் ஆகிய இவையாவும் ஆத்ம சைதன்யத்திலிருந்தே வருகின்றன. வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனையுமாயிருப்பது பரம் பொருள். இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனது மஹிமையையே விளக்கிக்கொண்டிருக்கிறது. அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத் தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது. அவன் அறிவாளி என்பதை ஒவ்வொரு ஜடப்பொருளின் அமைப்பும் எடுத்து உணர்த்துகிறது. அவன் இன்ப வடிவினன் என்பதற்கு இயற்கை யாவும் சான்றாகிறது. அவனுடைய ஆற்றலும் இயற்கையினூடு தோன்றிக்கொண்டிருக்கிறது. ஈசன் அழகன் என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் திரிபுரசுந்தரி எனப்படுவதும் இக்காரணத்தை முன்னிட்டேயாம். பிரபஞ்சமே அவனுக்கு விளக்கம். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன். அது அவனுடைய ஒரு சிறு பகுதி. இவையாவையும் அவன் உணர்கிறான். ஆதலால் அவன் வேதவித்-வேதத்தை அறிபவன் அல்லது இயற்கையை அறிபவன் ஆகிறான். பிரபஞ்சத்தைக் கடந்து வேதாந்த சொரூபமாயிருப்பதும் பரமாத்மாவே.

பரமாத்மாவின் சொரூப விளக்கத்தின் படித்தரங்கள் வருமாறு :

16. த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே 

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என, இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர், ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும், கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

பொருள் : உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம் என்று வெவ்வேறு வடிவும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மை யுடையவைகள். நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அங்ஙனம் ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். ஈசுவரன் என்ற புருஷனுக்கு இவைகள் உபாதியாகையால் இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை. மற்று ஈசுவரனை அது சாசுவதமாகச் சார்ந்துள்ளது. கூடஸ்தன் என்பது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும் மாயக்காட்சிகளும் காட்டவல்லது என்று பொருள்படுகிறது. ஈசுவரன் அல்லது சகுண பிரம்மத்தின் வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி, விஷ்ணு முதலியன ஒன்றுசேர்ந்து கூடஸ்தன் ஆகிறது. இதுவும் புருஷனுடைய உபாதியாகையால் புருஷன் என்றே அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச மயமான மாயாசக்தி என்றென்றைக்கும் இருக்கிறது. அதன் வடிவங்கள் மட்டும் புதியன புதியனவாக மாறியமைகின்றன.

பழத்தின் மேல்தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையினின்றும் உண்டாகின்றன. அதுபோல ஒரே ஈசுவரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.

இனி, பரமாத்மா எப்படி இருக்கிறார் என்றால் :

17. உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: 

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து, பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ, அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும், உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ, உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன், அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

பொருள் : இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாசஹிதன். உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம். நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புரு÷ஷாத்தமன். அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்தசைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன. அவரே முழுமுதற்பொருளாகிய பரபிரம்மம். நிர்க்குண பிரம்மம் என்றும், நாராயணன் என்றும், சதாசிவம் என்றும் அவர் சமயங்களால் அழைக்கப்படுகிறார்.

சரீரத்தில் ஈசுவரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான். அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறானென்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனவல்லன்.

18. யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம: 

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும், அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ, அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும், புரு÷ஷாத்தம: ப்ரதித: அஸ்மி-புரு÷ஷாத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

பொருள் : நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புரு÷ஷாத்தம னென்று கூறப்படுகிறேன்.

க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். இது அரசமரத்தோடு ஒப்பிட்டு ஏற்கனவே விளக்கப்பட்டது. அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈசுவரன். சித் சக்தியாக இப் பொருளைக் கருதுமிடத்து பரமேசுவரி என்று அவள் பெயர் பெறுகிறாள். ஜீவாத்மாக்களெல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர் விகாரமாயிருப்பவர் பரபிரம்மம். பக்தர்களும் கவிகளும் அவரைப் புரு÷ஷாத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது.

இத்தகைய புரு÷ஷாத்தமனை அறிந்தவன் எத்தகைய பாங்குடையவனாகிறான்? விடை வருகிறது :

19. யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புரு÷ஷாத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத 

பாரத:-பாரதா! ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை, ஏவம் புரு÷ஷாத்தமம் ஜாநாதி - இவ்வாறு புரு÷ஷாத்தமன் என்று அறிகிறானோ, ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும், மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

பொருள் : மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புரு÷ஷாத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

பொருள் ஒன்று. மதிமயக்கம் உள்ளவனுக்கு அது உலகாகக் காட்சி கொடுக்கிறது; மயக்கம் நீங்கப்பெற்றவனுக்கு அது கடவுள் காட்சி கொடுக்கிறது. கடவுள் காட்சியில் சில படித்தரங்கள் இருக்கின்றன. அனைத்தையும் ஆதரிப்பவராக அவர் முதலில் தோன்றுகிறார். அனைத்தும் அவரிடத்து அடங்கியிருக்கின்றன. பின்பு அவரே அனைத்தும் ஆகியிருக்கிறார். அடுத்தபடி தோற்றத்தளவில் அனைத்தும் இருக்கின்றன; உண்மையில் அவர்தான் இருக்கிறார். அவர் யாண்டும் உள்ளது உள்ளபடி இருக்கிறார். பூரணப் பொருளாகிய அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாகிறதில்லை. இது ஞானத்தின் முடிவான நிலை. கடவுள் காட்சி பெற்றவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான். ஏனென்றால் அதற்குமேல் அவன் அறியவேண்டியது ஒன்றுமில்லை. கடவுள் காட்சி பெற்றவுடனே மனப்பான்மையும் மாறியமைகிறது. மனது எந்த அவஸ்தையிலிருந்தாலும் அது கடவுளை வழுத்தும் பாங்குடையதாகிறது. தெய்வ வழிபாடே வடிவுடையதாகிறது அது.

ஈசுவர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும். ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது. இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.

கடவுள் காட்சியிலேயே நிலைபெறுவதால் மனிதன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

20. இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிதமுக்தம் மயாநக
ஏதத்‌புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத 

அநக:-குற்றமற்றோய், இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை, மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது, ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்ய, த்தக்கது செய்பவன் ஸ்யாத்-ஆகிறான்.

பொருள் : குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.

பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது. ஏனென்றால் வேதாந்தத்தின் சரீரம் முழுதும் இதில் இருக்கிறது. பரத்தை அறிபவனே ஞானியாகிறான். அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன. பரத்தை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை. பரத்தை அறிந்துகொள்ளுதற்கு நிகரான குறி வேறு எதும் இல்லை. பரத்தை அறிதற்கு மேலான புருஷார்த்தமில்லை. பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான்.

பெறுதற்குரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனேயாவான்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar