சோலைமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வடம் பிடித்த தங்கத்தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2017 11:02
அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தங்கத் தேரோட்டம் நடந்தது. அழகர்கோவில் மலை மீது உள்ள இக்கோயில் தைப்பூச விழா ஜன., 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கோயிலில் தேர் செல்வதற்கான இடவசதி இல்லாததால் முருகன் கோயிலில் தேர் இல்லை. இந்த குறையை போக்க தங்க தேர் செய்யப்பட்டது. தைப்பூசம் அன்று மட்டும் பக்தர்கள் இலவசமாக தேரை வடம் பிடித்து இழுக்கலாம். தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று காலையில் யாகசாலை பூஜை முடிந்து, உற்சவர் முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பல்லக்கில் புறப்பட்ட சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில், கண்காணிப்பாளர் அங்கயற்கன்னி முன்னிலையில் பணியாளர்கள் தேவராஜ், பாண்டியன், பட்டர் பாலகணபதி ஆகியோர் செய்திருந்தனர்.