பதிவு செய்த நாள்
17
பிப்
2017
11:02
ஓசூர்: ஓசூரில் நேற்று முன்தினம் இரவு பல்லக்கு உற்சவ திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்பேட்டையில் உள்ள திரவுபதி சமேத தர்மராஜா கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம், 12ல் நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு, பல்லக்கு உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி, சந்திரசூடேஸ்வரர், கோட்டை மாரியம்மன்,
பண்டாஞ்சநேயர், விநாயகர், முருகன் கோவில்களிலிருந்து, 30க்கும் மேற்பட்ட உற்சவர்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப மற்றும் முத்து பல்லக்கில் வலம் வந்தனர். இந்த பல்லக்குகள் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம், ஓசூரின் முக்கிய சாலை வழியாக சென்றது. கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் இளைஞர்கள் நடனம் ஆடியபடி சென்றனர். விழாவை முன்னிட்டு ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் என, ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, ஓசூர் ஏ.எஸ்.பி., ரோஹித்நாதன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.