பயம் நீக்கும் கோஷம் சிவன் கோவிலில் சுவாமி புறப்படும் போது ஒரு பக்தர் ஆலால சுந்தரா!’ என்று சொல்ல, மற்றவர்கள் அற்புத சுந்தரா!’ என்று கோஷமிடுவர். இதற்கு காரணம் தெரியுமா? சாகா மருந்தான அமுதம் எடுப்பதற்கு, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் எழுந்தது. எங்கும் உஷ்ணம் பரவியது. இதைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனின் உதவியை நாடினர். சிவன் தன் நண்பர் சுந்தரரை அழைத்து, பாற்கடலில் எழுந்த விஷத்தை ஒன்று திரட்டும்படி கட்டளையிட்டார். அவரும் இருகரம் குவித்து ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபிக்க, விஷம் நாவல்பழம் போல உருண்டையாகி அவர் கைக்கு வந்தது. அதைச் சிவனிடம் ஒப்படைத்தார். சிவன் அந்த உருண்டையை விழுங்கினார். இதைக் கண்ட தேவர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா’ என்று கோஷமிட்டு வணங்கினர். தேவர்களின் பயம் போக்கியது போல, நமது பயமும் நீங்கவே கோஷமிடுகிறார்கள்.