கும்பகோணம் சிவாலயங்களில் மார்ச் 2ல் மாசிமக கொடியேற்றம்: 11ல் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2017 03:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி வரும் 2ம் தேதி அனைத்து சிவாலயங்களிலும் பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்னு மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு மகாமக விழா கொண்டாடப்பட்டது. அதன்படி மாசிமக விழாவில் சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கொடியேற்றி பத்துநாள் உற்சவம் நடைபெறும். இதையடுத்து வரும் 2ம் தேதி மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர்கோயில், காளகஸ்தீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர்கோயில், அபிமுகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலங்களில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இதில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 5ம்தேதி அறுபத்து மூவர் வீதிவுலாவும், 9ம் தேதி ஐந்து தேரோட்டமும், 11ம் தேதி மகாமக குளத்தில் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. அதே போல் அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கோயில் சார்பில் மார்ச் 10ம் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெறும்.
வைணவத் தலங்கள்: மாசிமகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோயில், ராஜகோபாலசுவாமிகோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களில் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 6ம் தேதி கருட வாகனத்தில் வீதிவுலா அந்தந்த கோயிலில் நடைபெறுகிறது. 11ம் தேதி காலை 8.30 மணிக்கு சக்கரபாணி கோயிலில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. பின்னர் 12 மணியளவில் காவிரி ஆற்றில் சக்கரப் படித்துறையில் வைணவக் கோயில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மாசிமக விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.