பழநி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை: அமராவதி ஆற்றில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2017 11:03
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி சாமிநாதபுரம் அருகே தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், சேரல் பொழிலன் ஆகியோர் களஆய்வு செய்தனர். அதில் அமராவதி ஆற்றின் குறுக்கே கி.பி., 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட தடுப்பணை கல்வெட்டு ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக, கேரள எல்லை மஞ்சம்பட்டியில் உருவாகும் அமராவதி ஆறு 282 கி.மீ.,துாரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. சாமிநாதபுரம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் கி.பி.,12ம் நுாற்றாண்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.,1157ல் கொங்கு சோழ மன்னன் வீரநாராயணன் ஆட்சிக்காலத்தில், இந்த தடுப்பணையை கடத்துார் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து கட்டியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தடுப்பணையின் பெரும்பகுதி அழிந்துவிட்டன. எஞ்சியுள்ள சிறிய பகுதிகளே தற்போது உள்ளன.தடுப்பு அணையின் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்ட மதகு வாய்க்கால் இன்றும் அழியாமல் உள்ளது. இந்த வாய்க்கால் செங்கற்களை அடியில் வைத்து அதன்மேல் பாறாங்கற்களை வைத்து வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த பழங்கால கட்டட தொழில்நுட்பம் குறித்து வேறு பதிவு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.