பதிவு செய்த நாள்
01
மார்
2017
01:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த மாதம் 24ம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.
5ம் நாள் விழாவாக இன்று மாலை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. இதை முன்னிட்டு மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனுடன், காப்பு கட்டிய பக்தர்கள் அக்கினி குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். 4.30 மணிக்கு கோவில் முன்பு அமைத்திருந்த தீக்குண்டத்தில் சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் தீக்குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தீக்குண்டம் இறங்கினர். சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 9 மணிவரை நீண்ட வரிசையில் நின்றிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமித்தனர். முன்னதாக அக்னி குளத்தில் இருந்து ஊர்வலம் வந்த போது பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு லாரிகளில் தொங்கியும், லாரிகளை இழுத்தும் வந்தனர். தீமிதி நடந்த போது செடல் குத்திய பக்தர்கள் பரவை காவடி மூலம் ஆகாய மார்க்கமாக அம்மனுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை செய்தனர்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ். கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார்ரும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
2ம் தேதி தேர்திருவிழா: மேல்மலையனுார் கோவிலின் முக்கிய திருவிழாவான திருதேர் வடம் பிடித்தல் (2ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.