கண்மாய் கலுங்கில் கல்வெட்டுக்கள் : 13ம் நூற்றாண்டு ஆதாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 10:03
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பெரியகண்மாயின் கலுங்கு கட்ட பயன்படுத்தப்பட்ட கற்களில், 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு தண்ணீர் வெளியேறும் கலுங்கு, பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த கற்களில் பழமையான தமிழ் எழுத்துக்கள் உள்ளன. அவற்றை கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், பூலாங்குறிச்சி அரசுக் கல்லுாரி பேராசிரியர் வேலாயுதராஜா ஆகியோர் படி எடுத்தனர். அவர்கள் கூறியதாவது: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் காலத்தில் (1750-72) கலுங்கு கட்டப்பட்டுள்ளது. கேரளசிங்க வளநாடு என இப்பகுதி அழைக்கப்பட்ட போது, அங்கு மருவ சேகர சதுர்வேதி மங்கலம் எனும் பகுதி இருந்தது. அங்கிருந்த ஆழி ஆழ்வார் என்ற சக்கரத்தாழ்வார், வீற்றிருந்தாழ்வார் கோயில்களின் சிதைவுகளில் கிடைத்த கற்களைக் கொண்டு இந்த கலுங்கு கட்டப்பட்டு உள்ளது. கல்வெட்டுக்கள், 13ம் நுாற்றாண்டில் குலசேகரபாண்டியர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளன. தானம், நிலத்துண்டு, மரக்கால் எனும் அளவை குறித்த செய்திகளும் கல்வெட்டுகளில் உள்ளன. பல கல்வெட்டுகளில் தொடர்பில்லாத வாசகங்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயில்கள் எதனால் சிதைந்தன, எங்கு இருந்தவை என கண்டறியமுடியவில்லை. இவ்வாறு கூறினர்.