மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் மூன்று பகுதிகள் கழிப்பிடமாகவும், இறைச்சி கழிவுகளை கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கோயிலை சுற்றி வரமுடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.மேலவடம்போக்கி தெருவில் உள்ள இக்கோயிலின் சொர்க்கவாசல் பகுதி முழுவதும் கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. இத்தெருவில் கோயில் சுற்றுச்சுவர் பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இவ்வழியாக செல்வோர் வாகனங்களை மறைவாக கொண்டு கோயில் சுவரை கழிப்பிடமாக மாற்றி விட்டனர்.கோயிலின் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அனுமார் கோயில் உள்ளது. கோயிலின் இடது பகுதி முழுவதிலும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். அவற்றை நாய்கள் இழுத்து செல்வதால் சாலை முழுவதும் இறைச்சி கழிவுகள் சிதறுகின்றன. கோயிலின் பின் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. கோயிலை சுற்றிலும் கிளம்பும் கடும் துர்நாற்றத்தால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தை வலம் வருவதையும் நிறுத்தியுள்ளனர். கோயிலின் புனிதம் காக்க கோயில் செயல் அலுவலர் அனிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரசீர்கேடுகளை தடுக்க மாநகராட்சி அக்கறைகாட்ட வேண்டும்.