பதிவு செய்த நாள்
25
மார்
2017
11:03
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பூவோடு தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது. மண்பாண்டங்கள் பயன்பாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி, உணவுப்பொருட்கள் கெடாமல் உடலுக்கு வலுவாக இருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. இன்றும் நகர் புறங்களில் மண்பானை சமையலுக்கு என தனி மவுசு உள்ளது. தவிர, மண்பானையில் நிரப்பப்படும் தண்ணீர் குளிர்ச்சியை தரும் என்பதால், அதனையே பலரும் விரும்பி பருகுவர். அதன்படி, உடுமலை அடுத்த கண்ணம்மநாயக்கனுார், புக்குளம், சின்னவீரன்பட்டி, மரிக்கந்தை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தார் மண்பானை தயாரிப்பு பணியை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். தவிர, கோவில் திருவிழாக்களுக்கான மண் சிலைகள், அகல்விழக்கு உருவாரங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
இத்தொழிலுக்கு, மணல் கலந்த களிமண் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கொழுமம் கோதையாறு குளம், கிணத்துக்கடவு கோதாவாடி குளம் ஆகிய குளங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கென, கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்புதல் சான்றிதழ்களும் பெறப்படுகின்றன. மேலும், இவ்வாறு எடுக்கப்படும் குளத்து மண், உரிய தொழிலுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய நல வாரிய அட்டைகளையும், சான்றிதழுடன் சமர்ப்பிக்கின்றனர். அவ்வபோது, குளத்தில் மண் எடுக்க வருவாய் துறையினர் தடை விதிப்பதால், தொழிலாளர்கள் பாதிப்பும் அடைகின்றனர். கோவில் திருவிழா மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான மண்பானைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதில் தீச்சட்டி(பூவோடு) தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளன.
மண்பானை தொழிலாளர் மாரிமுத்து கூறியதாவது: குளங்களில், நீர்த்தேக்க பரப்பில் தேங்கும் மண், இந்த தொழிலுக்கு உகந்தாகும். கொழுமம் கோதையாறு குளத்தில் இருந்து மண் எடுத்து வரப்படுகிறது. தவிர, மண்பாண்டங்கள் ஒவ்வொன்றும், 50 ரூபாய் முதல், 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், வியாபாரிகள் அதில் பாதியளவு விலையே அளிக்கின்றனர். இதனால், பலரது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. பாரம்பரிய தொழில் என்பதால், மாற்றுத் தொழிலை நாடிச் செல்லவும் முடியவில்லை. தற்போது, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பூவோடு தயாரிக்கப்படுகிறது. அதன்படி, ஐந்தாயிரம் வரையிலான பூவோடுகள் தயாரிக்கப்படும். ஆனால், அதற்கு ஏற்ற உரிய விலையும் கிடைக்கப்பெறுவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார். -நமது நிருபர்-