பதிவு செய்த நாள்
29
மார்
2017
12:03
மதுரை: சினிமா, நாடகம் , சிறப்பு கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இன்றைய நவீன காலத்தில் நுழைவுக்கட்டணம், முன்பதிவுகள் உள்ளன. ஆனால் மதுரை அருகே வலையங்குளம் கிராமத்தில் நடக்கும் நாடகத்தை பார்ப்பதற்கு மக்கள் பாய்விரித்தும், விரிப்புகள் விரித்தும் இடங்களை வினோதமாய் முன்பதிவு செய்கின்றனர்.
வலையங்குளத்தில் பிப்., 24ல் சிவராத்திரி அன்று துவங்கிய நாடக திருவிழா, தொடர்ந்து 33 நாட்கள் நடந்து நேற்றுடன் நிறைவடைந்தது.இந்த கிராமத்தில், தனிலிங்க பெருமாளுக்கு நேர்ச்சை கடனாக, அவர் வீற்றிருக்கும் கோயிலுக்கு முன்பகுதியில் உள்ள மேடையில், நாடகங்கள் நடக்கும். இது சில ஆண்டுகள் 100 நாட்களை கடந்தும் நடந்திருக்கிறது.புராண நாடகங்கள் மட்டுமே நடத்தப்படுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிரபலமான குழுக்கள் இங்கு நாடகங்களை அரங்கேற்றுகின்றன. இந்த நாடகங்களை பல கிராமங்களில் இருந்தும் மக்கள் பார்த்து, பெருமாள் ஆசி பெற்று செல்கின்றனர்.இந்த ஆண்டு சிவராத்திரி அன்று அபிமன்யு சுந்தரி நாடகம் நடந்தது. அது முதல் தொடர்ந்து பல புராண நாடகங்கள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு துவங்கும் நாடகம், காலை 5:00 மணிக்கு முடியும். இங்குள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா, இந்த வாரம் துவங்க உள்ளதால் இந்த ஆண்டு 33 நாடகங்களுக்கு மட்டுமே அனுமதி.இரவில் நடக்கும் இந்த நாடகத்தை பார்பதற்காக காலையிலே மேடை முன் மக்கள் பாய்கள், விரிப்புகள் விரித்து இடம் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக புகழ்பெற்ற குழுவினர் வருவதாக இருந்தால் இங்கு இடம் பிடிப்பதில் போட்டியும் ஏற்பட்டு விடுகிறது.நேற்று வள்ளித்திருமணம் - பட்டாபிஷேகம் நாடகத்துடன் இந்த ஆண்டிற்கான நாடக திருவிழா முடிந்தது.
ரசிகர்கள் சிலர் கூறியதாவது: போஸ்,42: இந்த ஆண்டிற்கான கடைசி நாடகம் என்பதால் கிராம மக்கள் அனைவரும் விடிய விடிய விழித்திருந்து பார்ப்போம். எல்லோரும் வருவதால் நாடகம் பார்க்க இடம் கிடைக்காமல் போய்விடும் என்பதால் தான் ஒவ்வொரு குடும்பத்தினரும் பாய், விரிப்புகள் விரித்து இடம்பிடிக்கின்றனர். எனது சிறுவயது முதல் இது போன்ற காட்சிகளை இங்கு பார்த்து வருகிறேன். முத்துலட்சுமி, 35: புகழ்பெற்ற குழுவினர் வரும் போது துாக்கத்தை மறந்து நாடகத்தை பார்ப்பேன். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாள் நாடகத்தை துாங்காமல் பார்த்துவிடுவேன்.
முத்துக்குமார், 25: இந்த ஆண்டு வள்ளித் திருமணம் நாடகம் தான் அதிக நாட்கள் நடந்தது. ஆனால் வெவ்வேறு குழுவினர் இதில் பங்கேற்றதால் சுவாரஸ்யமாக இருந்தது. காலை 6:00 மணி வரை அமர்ந்து சில நாடகங்களை பார்த்தேன். ஒவ்வொரு நாடகத்தையும் தானாக தோன்றிய தனிலிங்க பெருமாள் பார்க்கும் போது நாமும் அவரோடு பார்ப்போம் என பல கிராம மக்கள் சோர்வின்றி உற்சாகமாக அமர்ந்து பார்க்கின்றனர்.