பதிவு செய்த நாள்
31
மார்
2017
01:03
வேலூர்: வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில், மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. வேலூர் அருகே, விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் பழுதடைந்த நிலையில், இதை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, பொதுமக்கள், 55 லட்சம் ரூபாயும், அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பங்களிப்புடன், மொத்தம், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், 36 அடி உயரத்தில், புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. இதை முன்னிட்டு மார்க்கபந்தீஸ்வரர், மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகசலை அமைத்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, மாட வீதியில் இழுத்துச் சென்று வலம் வந்து, சுவாமி, அம்மனை வழிபட்டனர்.