பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
05:04
உலகத்திலேயே சிறந்த பொக்கிஷம் எது என்றால், தங்கம், வைரம் வைடூரியம் என விலை மதிப்பு மிக்க பொருளைச்சொல்வார்கள். ஆனால் நபிகள் நாயகம், “நல்ல பெண் தான் மிகச்சிறந்த பொக்கிஷம். கணவர் அவளை பார்த்தால் அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளை விட்டும் சென்று விட்டால், அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்,” என்றார். இதன் பொருள் என்ன? மனைவி எந்நேரமும் சிடுசிடுவென முகத்தை வைத்திருந்தால், அவளைப் பார்க்கும் கணவருக்கு, இவளைப் போய் நிக்காஹ் செய்தோமே, அல்லாஹ் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தான்,” என்று தோன்றும்! அதே நேரம், அவள் சிரமமான சூழலிலும் இன்முகம் காட்டினால், வெளியே செல்லும் கணவரது செயல்களில் பாதிப்பு இருக்காது. கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம் அனுசரிப்புத்தன்மை ஏற்படும். ஒருவேளை, கணவரது கருத்தால் பிரச்னை வருமென்றால், சமயம் பார்த்து, இன்முகத்துடன் எடுத்துச் சொன்னால் அவர் புரிந்து கொண்டு, தன் திட்டத்தை மாற்றலாம். “அவர் அவளை விட்டும் சென்று விட்டால் அவரைப் பாதுகாப்பாள்” என்ற வாசகத்திலுள்ள அவரை என்ற வார்த்தை சற்று குழப்பம் உண்டாக்கக்கூடும். அதாவது, கணவர் இல்லாத நேரத்தில் அவருக்காகவே நான் இருக்கிறேன் என்ற கற்புநிலையைப் பாதுகாப்பாள் என பொருள் கொள்ள வேண்டும்.